போதையில் கார் ஓட்டி விபத்து நடிகர் மயூர் படேல் மீது வழக்கு
ஹலசூரு: குடிபோதையில் அலட்சியமாக கார் ஓட்டி, தொடர் விபத்தை ஏற்படுத்திய கன்னட நடிகர் மயூர் படேல் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கன்னட திரையுலகின் பிரபல நடிகர் மயூர் படேல். பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நேற்று முன் தினம், இரவு 9:30 மணியளவில், பெங்களூரின், ஓல்டு ஏர்போர்ட் சாலையில், கமாண்டோ மருத்துவமனை சிக்னல் அருகில், பார்ச்சூனர் காரில் சென்று கொண்டிருந்தார். காரை குறுக்கும், நெடுக்குமாக ஓட்டி சென்று, சிக்னலில் நின்றிருந்த இரண்டு கார்கள் மீது மோதினார். இதன்பின் மற்றொரு கார் மீது மோதினார். இந்த தொடர் விபத்தில் கார்கள் சேதமடைந்தன. அப்போது காரில் இருந்து கீழே இறங்கிய நடிகர் மயூர் படேல், சேதமடைந்த கார்களை சரி செய்து தருவதாக கூறினார். தகவலறிந்து அங்கு வந்த ஹலசூரு போக்குவரத்து போலீசார், மயூர் படேலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து, சோதனை நடத்தினர். அவர் மது அருந்திவிட்டு, காரை ஓட்டி வந்தது தெரிந்தது. எனவே, அவரது காரை போலீசார் பறிமுதல் செய்தனர். விபத்தில் சேதமடைந்த காரின் ஓட்டுநர் சீனிவாஸ், நடிகர் மீது புகார் அளித்துள்ளார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.