மத்திய ஆயுதப்படை பயிற்சி நிலைய அடிப்படை வசதிகள்: டி.ஜி.பி., உத்தரவு
தங்கவயல்: ''தங்கவயலில் அமைய உள்ள மத்திய ஆயுதப் படையின் பயிற்சி நிலையத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை 11 மாதங்களில் செய்து முடிக்க வேண்டும்,'' என்று மாநில போலீஸ் துறையின் வீட்டு வசதித்துறை டி.ஜி.பி., அருண்சக்ரவர்த்தி உத்தரவிட்டார். தங்கவயல் உரிகம் பகுதியில் அமைய உள்ள பயிற்சி நிலைய இடத்தை நேற்று அவர் ஆய்வு செய்தார். மத்திய ஆயுதப் படை, 1971ல் அமைக்கப்பட்டது. நாட்டில் பல மாநிலங்களில் 153 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. தங்கவயல் புதிதாக உருவாகும் தொழிற் பேட்டை பகுதியில் 100 ஏக்கரில் அமைய உள்ள மத்திய ஆயுதப் படை பயிற்சி நிலையத்துக்கு தேவையான நிதியை மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீதம் வழங்க முடிவாகியுள்ளது. இந்த பயிற்சி நிலையத்துக்கு தேவையான அலுவலகம், குடியிருப்புகளுக்கான வசதிகளை 11 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது, போலீஸ் எஸ்.பி., ஷிவான்ஷுராஜ்புத், டி.எஸ்.பி., லட்சுமையா உட்பட போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.