நந்தி மலையில் ரோப் வே மத்திய அரசு அனுமதி
சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர் நந்தி மலையில் ரோப் வே அமைக்க, மத்திய அரசின் அனுமதி கிடைத்து உள்ளது.பெங்களூரு அருகே உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில், சிக்கபல்லாபூரின் நந்தி மலையும் ஒன்று. ஐ.டி., ஊழியர்கள் அதிகளவில் செல்கின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர். வார இறுதி நாட்களில் மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்களில் வெளியிடும் புகையால் காற்று மாசுபாடும் அதிகரிக்கிறது. இதனை தடுக்க 2.93 கி.மீ., துாரத்திற்கு ரோப் வே அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்காக 93.40 கோடி ரூபாய் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டது. மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒப்புதலுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, நந்தி மலையில் ரோப் வே அமைக்க அனுமதி அளித்து உள்ளது. இதற்காக மரங்களை வெட்ட கூடாது; பாறைகளை தகர்க்க வெடி பயன்படுத்த கூடாது; ஜே.சி.பி., இயந்திரங்களை பயன்படுத்த கூடாது என்பது உட்பட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. மே மாதம் பணிகளை துவங்க அரசு தயாராகி வருகிறது.