உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சாமராஜா தொகுதி எனக்கு தான்; சிம்ஹாவுக்கு நாகேந்திரா பதிலடி

சாமராஜா தொகுதி எனக்கு தான்; சிம்ஹாவுக்கு நாகேந்திரா பதிலடி

மைசூரு: ' அடுத்த சட்டசபை தேர்தலில் சாமராஜா தொகுதியில் போட்டியிடுவேன்' என, பா.ஜ., 'மாஜி' எம்.பி., பிரதாப் சிம்ஹா கூறியவேளையில், '2028ல் சாமராஜா தொகுதி எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்படுவேன்' என, இத்தொகுதியின் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., நாகேந்திரா தெரிவித்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் மைசூரு முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா, 'அடுத்த சட்டசபை தேர்தலில், சாமராஜா தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடுவேன்' என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., நாகேந்திரா கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளேன். பா.ஜ.,விற்காக தீவிரமாக பணியாற்றி உள்ளேன். கட்சி மற்றும் தொகுதி மக்களின் ஆசிர்வாதம் எனக்கு உள்ளது. எனவே, இத்தொகுதிக்கான 'சீட்' வேறு யாருக்கும் வழங்கப்படாது என்பதில் உறுதியாக உள்ளேன். கடந்த 2024 லோக்சபா தேர்தலில், சீட் கிடைக்கும் என்று பிரதாப் சிம்ஹா கூறி வந்தார். ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. அவருக்கு எதற்காக சீட் மறுக்கப்பட்டது என்பதை பகிரங்கமாக அவரால் கூற முடியுமா. சட்டசபை தேர்தலில் போட்டியிட அவர் விரும்பினால், வேறு தொகுதி மீது கண் வைக்கட்டும். அவர் எது சொன்னாலும் கட்சி மேலிடம் நம்பாது. 25 பேர் போட்டியிட விரும்பினாலும், கட்சி மேலிடம் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், அவருக்கு சீட் கிடைக்கவில்லை என்ற காரணத்தால், பா.ஜ., வேட்பாளர் யதுவீருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வரவில்லை. எனவே, சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேச அவருக்கு உரிமையில்லை. அவருக்கு சீட் கொடுப்பதாக மாநில தலைவர்களோ அல்லது மேலிட தலைவர்களோ வாக்குறுதி அளித்தார்களா என்பதை அவர் பகிரங்கப்படுத்தட்டும் . நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இத்தொகுதியில் தான். எனக்கு தர்மபூமியும் கர்மபூமியும் இத்தொகுதி தான். எனவே, தொகுதி மக்களை குழப்பம் வகையில் பிரதாப் சிம்ஹாவும், தலைவர்களும் பேச வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை