உள்ளூர் செய்திகள்

 செக் போஸ்ட்

காலத்தை வீணடிக்கும் வித்தை! எந்த ஒரு கம்பெனியிலும் இல்லாத அளவுக்கு கோல்டு மைன்சில் கட்சிக்கு ஒரு தொழிற் சங்கமென, 17 தொழிற்சங்கங்கள் இருந்தன. எந்த ஒரு பிரச்னைக்கும் இவங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்ததே இல்லை என்பதே பழைய நிலைப்பாடு. இந்த ஒற்றுமையின்மையை நல்லாவே தெரிந்து கொண்ட, கையாளாகாத செங்கோட்டையில், 28 வருஷங்கள் மக்கள் பிரதிநிதியாக இருந்தவரு. எல்லாரையும், 'ஒண்ணா சேர்ந்து வாங்க' என்று சொல்லியே அவருடைய பதவிக் காலத்தை வீணாக்கிட்டாரு. இவருக்கு பின் வந்தவர்களும், இவரைப் போலவே, 'ஒண்ணா சேர்ந்து வாங்க' என்ற பழைய பல்லவியை மறக்கல. மைன்சை மூடினதுமே அந்த தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளையும், இருக்கும் இடம் தெரியாமல் மூடு விழா நடத்திட்டாங்க. இப்போது மாஜி தொழிலாளர் பிரச்னைக்கு ஒண்ணா சேர்ந்து வாங்கன்னு இப்போதைய புல்லுக்கட்டுக்காரர் அழைக்கப்படுகிறார். மைன்ஸ் மூடும் நெருக்கடி நேரத்தின் போதே, 500 தொழிலாளர் ஒண்ணா கூடியதே இல்லை. கட்சிகளின், சங்கங்களின், தலைவர்களை பின் பற்றி, அவர்களுக்கு சலாம் போட்டு குலாம் போல ஆகி உரிமைகளை பாழாக்க பழகிட்டாங்க. கடைசியாக, ஆஜர் பட்டியலில் இருந்த தொழிலாளர்களில், 1,000 பேர் இறந்து விட்டதாக தகவல் இருக்குது. இவங்களோட நிலுவைத் தொகை கிடைத்தால் போதுமென ஒரு தரப்பினர் இருக்காங்க. இதை கேட்டு பெறுவதற்காகிலும் ஒண்ணு சேருவாங்களா? * 'குட் பை' யாருக்கு? கை கட்சிக்கு முக்கிய அங்கமாக, வலம் வந்த பொன்னகர் முனிசி.,யின் முன்னாள் தலைவர், நிலை குழுத் தலைவராக இருந்தவர், அசெம்பிளி மேடத்துடன் மனஸ்தாபம் ஏற்பட்டு, அந்த கட்சியை விட்டு வெளியேறி, காவி கொடியை கையில் துாக்கினாரு. இவருக்கு காவி கட்சியில் பெரிய பதவி, கவுரவம் வந்து தலையில் ஏறும் என எதிர்பார்த்தார். பூ கட்சிக்கு தாவி ஓரிரு மாதங்கள் கூட தாக்கு பிடிக்க முடியாமல், அம்மன் கோவில் வாசலில் ரிட்டர்ன் டூ பெவிலியன் போல மேடம் 'பர்த் டே'வில் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாராம். இது, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அவர் சொல்றாரு. இதை காவிக் காரங்க ஏத்துக்கணுமே. இவருக்கு பூவின் வாசம் பிடிக்கலையோ. மறுபடியும், அவர் கை கட்சியில், ரீ என்ட்ரி ஆகிட்டாரா என்பது தான் கைக்காரங்க பேச்சு. எப்படியோ எல்லாம் மேடம் செயல். காவிக்கு குட் பை சொல்வாரோ! * ஒண்ணு கூடிட்டாங்க! எட்டு ஆண்டுகளாக எலியும் பூனையுமாக, பாம்பும் கீரியும் போல இருந்த மாநில உணவுத் துறை மந்திரியும், மாஜி ஸ்பீக்கரும் தொலைபேசியில் பேசி இருவருமே, 'ஹலோ ஹலோ சுகமா'ன்னு நலன் விசாரித்துக் கொண்டார்களாம். ரெண்டு பேரும் தான் கோலார் மாவட்ட கை கட்சி கோஷ்டி சிக்கலின் தலைவலிகள் என மாநிலமே அறியும். இந்த திடீர் ஞானோதயம் முதலில், மாஜி ஸ்பீக்கருக்கு தான் ஏற்பட்டு, அவரின் செல்போன் எண்ணில் இருந்து தான் அழைப்பு வந்ததாம். இது மந்திரி பி.ஏ., வுக்கு ஷாக் ஆகியிருக்கு. 'இன்னார் லைனில் இருக்காரு சார்'னு சொன்னதும், 1,000 வாட்ஸ் பல்பு வெளிச்சம் மந்திரியார் முகத்தில் பிரகாசமா காண முடிந்ததாம். இருவருமே அந்த தொலைபேசியில் பகையை மறந்து புது வசந்தம் ஏற்பட்டது போல பழைய நட்பை தொடர்ந்தாங்களாம். சீனிவாசப்பூரில் ரேஷன் டிப்போக்கள் அனுமதி விவகாரம், மாஜி ஸ்பீக்கர் கோரிக்கைக்கு ஆவன செய்வதாக உறுதி அளித்தாராம். செங்கோட்டைக்கு நுழைய முடியாமல் போன கதையை உணவு மந்திரி மறக்க முடியுமா... சீனிவாசப்பூர் தொகுதியில் ஜெயித்திருந்தால் கேபினட் மந்திரி ஆகியிருப்பேனே என நினைக்காமல் இருக்க முடியாதா. அரசியலிலும் வயதிலும் முதிர்ச்சி அடைந்து காலம் கடந்து, இருவருமே 'நெஞ்சுக்கு நீதி' யை அறிந்துக் கொண்டார்களோ. இவர்களின் பரஸ்பர தொடர்பு கோலார் கை வட்டாரத்தில் பல்வேறு வியூகங்களை ஏற்படுத்தி உள்ளது. * ரூ.100 கோடி கமிஷன்? புல் மார்க்கெட் பகுதியில் வணிக வளாகம் கட்டும் பணிக்கு வேலை விரைந்து நடக்குதாமே. தேசிய வங்கியோ, உலக வங்கியோ, 100 சி வரை கடன் வழங்க முன் வந்துள்ளனவாம். இதன் பணி தான் நகரின் டெவலப்மென்ட்டுக்கும், வருமானத்துக்கும் வழி ஏற்படுத்துமாம். ஏற்கனவே, இதே இடத்தில் இருந்த 100க்கும் அதிகமான கடைகளை இடிக்க யார் அனுமதி வழங்கினாங்க. வர வேண்டிய வாடகை பாக்கி 2 சி யை யாரிடம் வசூலிப்பது. அதுக்கு யார் பொறுப்பு? இதையெல்லாம் நீர் மேல் எழுத்தாக்கி, வணிக வளாகம் கட்டுவதால், 40 பர்சன்ட் கமிஷன் கிடைக்குமேங்கிற ஆதங்கம் மட்டுமே, 100 சி மீது தான் ஆக் ஷன் பிளான் நடக்குதாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !