உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரிக்கி ராயை கொல்ல முயற்சி நெருங்கிய கூட்டாளி மறுப்பு

ரிக்கி ராயை கொல்ல முயற்சி நெருங்கிய கூட்டாளி மறுப்பு

பெங்களூரு: “ரிக்கி ராயை கொல்ல முயற்சி நடந்ததில், எனக்கு எந்த தொடர்பும் இல்லை,” என, முத்தப்பா ராயின் நெருங்கிய கூட்டாளி ராகேஷ் மல்லி கூறி உள்ளார்.முன்னாள் நிழல் உலக தாதா முத்தப்பா ராயின் மகன் ரிக்கி ராயை சுட்டுக் கொல்ல முயன்றது பற்றி, ராம்நகர் பிடதி போலீசார் விசாரிக்கின்றனர். இந்த வழக்கில் முத்தப்பா ராயின் 2வது மனைவி அனுராதா, நெருங்கிய கூட்டாளி ராகேஷ் மல்லி உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவானது. நேற்று முன்தினம் பிடதி போலீஸ் நிலையத்தில் ராகேஷ் மல்லி விசாரணைக்கு ஆஜரானார்.பின், நேற்று அவர் அளித்த பேட்டி:கடந்த 22 ஆண்டுகளாக என் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை. முத்தப்பா ராய் இறப்பதற்கு முன்பு அவருக்கும், எனக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. நான் அவரிடம் இருந்து விலகிச் சென்றேன்.என் குடும்பத்துடன் வசிக்கிறேன். ரிக்கி ராயை கொல்ல முயன்றதாக என் மீது வழக்குப் பதிவாகி இருப்பது ஆச்சர்யமாக உள்ளது. இதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.முத்தப்பா ராய் உயிரிழப்பதற்கு முன்பு தன்னுடன் இருந்தவர்களுக்கு நிலம் கொடுத்தார் என்று கூறுவது பொய். ஒரு அங்குலம் நிலத்தை கூட யாருக்கும் தரவில்லை. அவருக்காக வேலை செய்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்கு ஏதாவது கொடுத்து இருக்கலாம்.ரிக்கி ராயை கொல்ல முயன்றது பற்றி இப்போது எதுவும் பேச மாட்டேன். விசாரணை முடிந்த பின், அனைத்தையும் சொல்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !