பிடதி டவுன்ஷிப் திட்டம் ஆய்வுக்கு முன்னாள் நீதிபதி தலைமையில் குழு
பெங்களூரு: பிடதி டவுன்ஷிப் திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு கருத்துகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி குகநாதன் நரேந்தர் தலைமையிலான குழுவை அமைத்து, முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டு உள்ளார். பெங்களூரு தெற்கு மாவட்டம் பிடதியில், 'பிடதி விரிவான புறநகர் திட்டம்' செயல்படுத்த, 2006ல் முடிவு செய்யப்பட்டது. சமீபத்தில் பெங்களூரு அருகில் முதலீட்டுக்கான தேவை அதிகரித்து உள்ளது. எனவே, குடியிருப்பு பகுதிகள் மக்கள் இடம் பெயர்வதையும் தடுக்கவும், நில உரிமையாளர்களுக்கு சிறந்த நில மதிப்பை வழங்கும் நோக்கிலும், நிலுவையில் இருந்த, 'பிடதி விரிவான புறநகர் திட்டத்தை, 'பெருநகர பெங்களூரு விரிவான புறநகர் திட்டம்' என்ற பெயரில் தொடர அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை மக்கள் நலன் சார்ந்த முறையில் செயல்படுத்த பொது மக்களின் ஆலோசனைகள், அறிவுரைகள், கருத்துகள் பரிசீலிக்கப்படும் என்று, அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது. மக்களின் விருப்பங்களுக்கு மதிப்பளித்து, இத்திட்டத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கம். எனவே, கர்நாடக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குகநாதன் நரேந்தர் தலைமையில் குழு அமைத்து முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இக்குழுவில் ஓய்வு பெற்ற தலைமை செயலர் ரங்கநாத், ஓய்வு பெற்ற கூடுதல் தலைமை செயலர் உமாசங்கர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிரசன்ன குமார் ஆகியேர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் 30 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. 'பிடதி டவுன்ஷிப்' திட்டத்தை எதிர்த்து இன்றும், நாளையும் ம.ஜ.த., பாதயாத்திரை மேற்கொள்ளவுள்ள நிலையில், மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.