கொலை வழக்கில் காங்., - எம்.எல்.ஏ., கார் டிரைவர் கைது
சித்ரதுர்கா : காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வின் கார் டிரைவர், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். சித்ரதுர்கா, ஜனகல் கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னா, 45. இவர் கடந்த மார்ச் 17ம் தேதி காணாமல் போனதாக, ஹொசதுர்கா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மார்ச் 21ம் தேதி, சிக்கமகளூரு மாவட்டம், லிங்கதள்ளி வனப்பகுதியில் பிரசன்னாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில், பிரசன்னாவின் மனைவி காயத்ரி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. காயத்ரியிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. காயத்ரி, ஹொசதுர்கா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பி.ஜி.கோவிந்தப்பாவின், கார் டிரைவர் யஷ்வந்த், 33 உடன் கள்ளத் தொடர்பில் இருப்பது தெரிந்தது. இவர்கள் திட்டமிட்டு பிரசன்னாவை கொலை செய்துவிட்டு நாடகமாடியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ஹொசதுர்கா போலீசார் நேற்று யஷ்வந்த், காயத்ரி, அவர்களுக்கு உதவிய லோஹித், வீரேஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்து உள்ளனர்.