மாணவர்களுக்கு முட்டை நிதியை அதிகரிக்க முடிவு
பெங்களூரு: ''பள்ளி மாணவர்களுக்கு, முட்டை வழங்க, தற்போது வழங்கப்படும் நிதியை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா மேல்சபையில் தெரிவித்தார். மேல்சபையில் நேற்று நடந்த விவாதம்: காங்., - ராமோஜி கவுடா: அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசு இலவச முட்டை வழங்குகிறது. தற்போது ஒரு முட்டைக்கு தலா 6 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. ஆனால் மார்க்கெட்டில் முட்டை விலை அதிகரித்துள்ளது. ஒரு முட்டை விலை 8 ரூபாய் வரை விற்கின்றனர். மார்க்கெட் விலைப்படி அரசு நிதி வழங்க வேண்டும் அல்லது முட்டை வினியோகிக்க ஏஜன்சியை நியமிக்க வேண்டும். பள்ளி ஆசிரியர்கள், வேறு பணிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர். எஸ்.ஐ.ஆர்., பணி, தேர்தல், ஜாதி கணக்கெடுப்பு என, பல பணிகளை செய்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடிவதில்லை. எனவே ஆசிரியர்களை வேறு பணிகளுக்கு, நியமிக்க கூடாது. அமைச்சர் மது பங்காரப்பா: தேசிய அளவிலான விலை அடிப்படையில், நாங்கள் முட்டை நிதியை முடிவு செய்கிறோம். மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில், அரசு வழங்கும் தொகை போதுமானதாக உள்ளது. 100 சதவீதம் மாணவர்கள் உள்ள பள்ளிகளில், முட்டை விலை அதிகரிப்பால் பிரச்னை ஏற்படுகிறது. நிதித்துறையுடன் ஆலோசனை நடத்தி, முட்டை நிதியை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.