பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு சோளம், கேழ்வரகு வழங்க முடிவு
பெங்களூரு : வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள, பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு, மே மாதம் முதல் 'அன்னபாக்யா' திட்டத்தின் கீழ், இலவச கேழ்வரகு, சோளம் வழங்க உணவுத்துறை திட்டமிட்டுள்ளது.கர்நாடகாவில் அன்னபாக்யா திட்டத்தின் கீழ், பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் ஐந்து கிலோ அரிசியும், ஐந்து கிலோ அரிசிக்கான தொகையும் வழங்கப்படுகிறது. மத்திய அரசு சார்பில் ஐந்து கிலோ அரிசி வழங்கப்படுகிறது.வட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு அரிசி அளவை குறைத்துக் கொண்டு, கேழ்வரகு, சோளம் வழங்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன்படி கேழ்வரகு, சோளம் வழங்க உணவுத்துறை முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பயனாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தானியங்களின் அளவில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. மக்களின் கோரிக்கைப்படி, சில மாவட்டங்களில் கேழ்வரகு, சோளம் வழங்கப்படும். அந்தந்த மாவட்டங்களின் உணவு பழக்கத்துக்கு தகுந்தபடி, உணவு தானியங்கள் வழங்கப்படும்.தென் மாவட்டங்களின் பயனாளிகளுக்கு, மூன்று கிலோ கேழ்வரகு, இரண்டு கிலோ அரிசியும், வட மாவட்டங்களின் பயனாளிகளுக்கு மூன்று கிலோ சோளம், இரண்டு கிலோ அரிசியும் வழங்கப்படும். வரும் மே மாதம் முதல், பயனாளிகளுக்கு சோளம், கேழ்வரகு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.