| ADDED : நவ 27, 2025 07:15 AM
பெங்களூரு: கடந்தாண்டு கர்நாடக மக்களை அச்சுறுத்திய டெங்கு காய்ச்சல், நடப்பாண்டு 81 சதவீதம் குறைந்துள்ளதால், சுகாதாரத்துறை நிம்மதி அடைந்துள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: கடந்தாண்டு கர்நாடகாவில், 32,000க்கும் மேற்பட்டோருக்கு, டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது; 24 பேர் உயிரிழந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு படிப்படியாக குறைந்தது. நடப்பாண்டில் டெங்கு பாதிப்பு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 81 சதவீதம் குறைந்துள்ளது. ஜனவரி முதல் இதுவரை, 6,495 பேருக்கு நோய் உறுதியானது. உயிரிழப்பு ஏற்படவில்லை. பகலில் கடிக்கும் கொசுக்களால் டெங்கு பரவுகிறது. நடப்பாண்டு நோய் அறிகுறிகள் இருந்த 95,000க்கும் மேற்பட்டோரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கிரேட்டர் பெங்களூரு ஆணைய எல்லையில், 3,213 பேருக்கும், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் 3,382 பேருக்கு டெங்கு உறுதியானது. டெங்கு பாதிப்புள்ள பகுதிகளில் நிரந்தரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, டெங்கு கட்டுப்படுத்தும் தினம் செயல்படுத்துவது, நோய் பரப்பும் இடங்களை அடையாளம் கண்டு அழிப்பது உள்ளிட்ட, பல்வேறு நடவடிக்கைகளால், நடப்பாண்டு டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. மாநிலத்தில் நடப்பாண்டு, 974 பேருக்கு சிக்குன்குன்யா பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.