உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  குப்பை அள்ளுவதில் ஊழல் சோதனையில் கண்டுபிடிப்பு

 குப்பை அள்ளுவதில் ஊழல் சோதனையில் கண்டுபிடிப்பு

பெங்களூரு: இல்லாத ஆட்டோக்களை, இருப்பதாக பொய்யான கணக்கு காட்டியது; 'கியுஆர் கோடு' ஸ்கேன் செய்து, ஆட்டோக்கள் குப்பை அள்ள சென்றதாக கணக்கு காட்டியது உட்பட, மாநகராட்சியில் குப்பை அள்ளுவதில் பல விதமான, 'கோல்மால்'கள் நடந்துள்ளன. பெங்களூரில் குப்பை அள்ளுவதில், பெரும் முறைகேடு நடக்கிறது. குப்பை அள்ளும் ஆட்டோ டிப்பர்கள் போதுமான அளவில் இல்லை. வீடுகளிலும் குப்பை சேகரிக்க வருவதில்லை என, புகார் வந்தது. எனவே, பெங்களூரு வடக்கு மாநகராட்சி கமிஷனர் பொம்மல சுனில்குமார் தலைமையில், நான்கு குழுவினர் நேற்று முன் தினம் அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வீலர் டவுன் மேம்பாலம், கெம்பே கவுடா லே - அவுட் உட்பட, பல இடங்களில் சோதனை நடந்தது. சோதனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முறைகேடு தொடர்பாக, மார்ஷல்களை பணி நீக்கம் செய்யும்படி, பெங்களூரு வடக்கு மாநகராட்சி கமிஷனர் பொம்மலா சுனில்குமார் உத்தரவிட்டார். அதன்படி, மார்ஷல்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ டிப்பர்களின் ஆன்லைன் பதிவு குறித்து, ஆய்வு செய்த போது, 24 ஆட்டோ டிப்பர்கள் செயல்படுவதாக, கணக்கு காட்டப்பட்டிருந்தது. ஆனால், வெறும் மூன்று ஆட்டோ டிப்பர்கள் மட்டுமே நின்றிருந்தன. மற்றவை குப்பை அள்ள சென்றுள்ளதாக, பொய்யான தகவல் பதிவாகி இருந்தது. சில ஆட்டோ டிப்பர்களில் உதவியாளர்களே இருக்கவில்லை; இருப்பதாக பொய்க்கணக்கு காட்டியுள்ளனர். குப்பை அள்ளும் இடத்தில் இருந்து, 150 மீட்டர் எல்லையில், மொபைல் போன் செயலி மூலமாக, கியு ஆர் கோடு ஸ்கேன் செய்து, ஆட்டோ டிப்பர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும். ஆனால், சில இடங்களில், வாகனங்கள் இல்லாத நிலையிலும், கியு ஆர் கோடு பயன்படுத்தி வருகை பதிவு செய்துள்ளதை, அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது போல, பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. பல இடங்களில் துப்புரவு பணியாளர்கள், கைகளில் பாதுகாப்பு கையுறை அணியாமல், குப்பை அள்ளியதும் தெரிந்தது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கமிஷனர் விளக்கம் கேட்டுள்ளார். வரும் நாட்களில், இது போல, திடீர் சோதனை நடத்தவும், உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை