மரக்கிளை விழுந்து வாகன ஓட்டி சீரியஸ்
பெங்களூரு: மரக்கிளை முறிந்து, இரு சக்கர வாகன ஓட்டியின் தலையில் விழுந்ததால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெங்களூரு ராஜாஜிநகரை சேர்ந்தவர் சதீஷ், 52. நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த, 24ம் தேதி காலையில் பணம் வசூலிக்க ராஜாஜிநகர், ராம் மந்திர் சாலை வழியாக, தனது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்று கொண்டிருந்தார். அப்போது, காய்ந்த மரக்கிளை ஒன்று, அவரின் தலை மீது விழுந்தது. இதனால் அவர், இரு சக்கர வாகனத்துடன் சாலையின் நடுவில் விழுந்தார். உடனடியாக மயங்கினார். இதை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக அவரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, யஷ்வந்த்பூர் மணிப்பால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மறுநாள் 25ம் தேதி மூளையில் ரத்தம் உறைந்ததால், இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரின் நிலை மோசமாக இருப்பதால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் கோபமடைந்த அப்பகுதியினர், பெங்களூரு மேற்கு மாநகராட்சி அதிகாரிகளை வசைபாடி வருகின்றனர். காய்ந்த மரக்கிளைகளை அகற்றும்படி பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததால், இந்நிலை ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டினர்.