உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காய்கறி வாகனங்களை மறிக்கும் யானைகளால் டிரைவர்கள் பீதி

காய்கறி வாகனங்களை மறிக்கும் யானைகளால் டிரைவர்கள் பீதி

சாம்ராஜ்நகர்: பண்டிப்பூர் புலிகள் சரணாலய வனப்பகுதியில், ஊட்டி பாதையில் காய்கறி வாகனங்களை மடக்கும் காட்டு யானைகளால், வாகன ஓட்டுநர்கள் பீதியில் உள்ளனர். கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, வெளி மாநிலங்களுக்கு காய்கறிகள் கொண்டு செல்லும் வாகனங்கள், பண்டிப்பூர் வழியாக செல்ல வேண்டியுள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின், பண்டிப்பூர் புலிகள் சரணாலய வனப்பகுதியின் ஊட்டி பாதையில் செல்லும் காய்கறி வாகனங்களுக்கு, காட்டு யானைகள் பெரும் தலைவலியாக உள்ளன. வாகனத்தில் செல்வோரை ரவுடிகள் வழி மறித்து, பணம் பறிப்பதை போன்று காய்கறி வாகனங்களை மடக்கி, காட்டு யானைகள் காய்கறிகள் மூட்டைகளை இழுத்து, கீழே தள்ளி தின்கின்றன. காய்கறிகள், கரும்பு வாகனங்களை யானைகள் கண்டால் விடுவதே இல்லை. தார்பாய் போட்டாலும் விடுவதில்லை. பட்டாசு வெடித்தாலும் கண்டு கொள்வது இல்லை. நேற்று காலையும் இதே போன்று, காய்கறி லாரியை மடக்கிய யானை, காய்கறிகளை தின்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. சாம்ராஜ் நகரின் புனஜநுார் அருகில், சிக்கமகளூரில் இருந்து, கேரளாவுக்கு எய்ச்சர் வேனில் தக்காளி சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து, வேன் சாலையில் விழுந்தது. அதில் இருந்த 210 பாக்ஸ் தக்காளிகள் கீழே விழுந்தன. இதை கண்ட காட்டு யானை, வேகமாக ஓடி வந்து தக்காளிகளை தின்றது. சாலை நடுவில் யானை நின்றதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், போலீசார் பட்டாசு வெடித்து யானையை வனத்துக்குள் விரட்டினர்.தக்காளி வாகனத்தை ஓரமாக நகர்த்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி