உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தசரா யானைகளுக்கு உற்சாக வரவேற்பு

தசரா யானைகளுக்கு உற்சாக வரவேற்பு

மைசூரு: தசரா யானைகளுக்கு, மைசூரின் அசோக்புரத்தின் வன பவனில் இருந்து, பூஜை செய்து அரண்மனைக்கு வழி அனுப்பி வைத்தனர். மைசூரு தசராவில், ஜம்பு சவாரி மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகும். ஜம்பு சவாரியை காண, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகை தருவர். இம்முறை தசராவுக்கு மாவட்ட நிர்வாகம், ஏற்கனவே முன்னேற்பாடுகளை துவக்கியுள்ளது. தங்க அம்பாரி சுமக்கும் கேப்டன் அபிமன்யூ தலைமையில், அலங்கரிக்கப்பட்ட ஒன்பது யானைகள் ஆகஸ்ட் 4ம் தேதியன்று, முகாம்களில் இருந்து மைசூரின் அசோக்புரத்தில் உள்ள வன பவனுக்கு அழைத்து வரப்பட்டன. இங்கிருந்து நேற்று மாலை அரண்மனைக்கு புறப்பட்டன. யானைகளுக்கு வனத்துறை அதிகாரி பிரபுகவுடா, சம்பிரதாயப்படி பூஜை செய்து, புஷ்பார்ச்சனை செய்து வழி அனுப்பினார். அசோக சதுக்கம், ராமசாமி சதுக்கம், சாமராஜா இரட்டை சாலை வழியாக, யானைகள் அம்பாவிலாஸ் அரண்மனையை அடைந்தன. அங்கிருந்த சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா, கால்நடைத்துறை அமைச்சர் வெங்கடேஷ், எம்.எல்.ஏ.,க்கள் ஜி.டி.தேவகவுடா, தன்வீர் சேட் உட்பட, அதிகாரிகள், தசரா யானைகளை மலர் தூவி, பூஜித்து வரவேற்றனர். அரண்மனை புரோகிதர்கள், யானைகளுக்கு பூஜை செய்தனர். அரண்மனை வளாகத்தில் யானைகள் தங்குவதற்கு சிறப்பான முறையில் வசதி செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ