மேலும் செய்திகள்
குற்றங்களை மறைக்கும் போலீசால் புலம்புது சிட்டி
24-Jun-2025
பெங்களூரு: “குறி சொல்லி பணம் சம்பாதித்தேன்,” என கூறிய கலால் துறை இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு, லோக் ஆயுக்தா நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.பெங்களூரு தெற்கு மண்டலத்தின், கலால் துறை இன்ஸ்பெக்டராக இருந்தவர் கிருஷ்ண மூர்த்தி. இவர் வருவாய்க்கும் அதிகமான சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2013 ஆகஸ்டில் அவரது வீட்டில், லோக் ஆயுக்யா போலீசார் சோதனை நடத்தினர். ரொக்கப்பணம், வங்கி டிபாசிட் பத்திரங்கள், சொத்து பத்திரங்கள், தங்கம், வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டனர்.அவரது வீட்டில் இருந்து சில ஓலைச்சுவடிகளும், மூலிகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆவணங்களை ஆய்வு செய்ததில், அவரது சொத்து மதிப்பு 72.54 லட்சம் ரூபாய் என்பது தெரிந்தது. 1990 முதல் 2013 வரை, அவரது அதிகாரப்பூர்வமான சொத்து மதிப்பு 42.55 லட்சம் ரூபாயாக இருந்தது. கூடுதலாக 29 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வைத்திருந்தார். விசாரணையை முடித்த லோக் ஆயுக்தா போலீசார், லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீதிமன்ற விசாரணையின்போது கிருஷ்ண மூர்த்தி, ''நாங்கள் குறிசொல்லும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்; குறி சொல்வது மட்டுமின்றி, நாட்டு வைத்தியமும் செய்கிறேன். ''இதற்காக நான் கட்டணம் ஏதும் பெறுவதில்லை. பணத்தை கேட்டு பெற்றால், எங்களின் திறமை அழிந்து போகும். தட்சணையாக கிடைக்கும் பணத்தை வைத்துக் கொள்ளலாம்,'' என கூறினார்.பல ஆண்டுகள் விசாரணை நடந்தன. சமீபத்தில் நடந்த விசாரணையின்போதும், இதையே கூறினார். நேற்று முன் தினம், வழக்கு விசாரணை நடந்தபோது, வாதம், பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதி, 'குறி சொல்வதற்கு கட்டணம் பெறுவதில்லை என, முன்னர் கூறினீர்கள். 'இப்போது குறிசொல்லி ஐந்து லட்சம் ரூபாய், நாட்டு வைத்தியம் செய்து மூன்று லட்சம் ரூபாய் சம்பாதித்ததாக கூறுகிறீர்கள். குலத்தொழிலுக்கு துரோகம் செய்கிறீர்களா?' என காட்டமாக கேள்வி எழுப்பினார்.இறுதியில் கிருஷ்ண மூர்த்திக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 30 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
24-Jun-2025