உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நிலம் கையகப்படுத்த  விவசாயிகள் எதிர்ப்பு

 நிலம் கையகப்படுத்த  விவசாயிகள் எதிர்ப்பு

துமகூரு: துமகூரில் ஹெச்.ஏ.எல்., நிறுவன விரிவாக்க பணிகளுக்கு 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர். துமகூரு மாவட்டம், குப்பி தாலுகாவில் ஹெச்.ஏ.எல்., எனும் ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனம் 1,000 ஏக்க ர் பரப்பளவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்கு 600 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. கே.ஐ.ஏ.டி.பி., எனும் கர்நாடக தொழில்துறை பகுதிகள் மேம்பாட்டு வாரியம் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபடுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துமகூரில் உள்ள கே.ஐ.ஏ.டி.பி., அலுவலகம் முன் நேற்று ஏராளமான விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: கே.ஐ.ஏ.டி.பி.,யால் அடையாளம் காணப்பட்ட நிலத்தில் தென்னை, பாக்கு உள்ளிட்ட பல பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன. இந்த நிலத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்தே குடும்பத்தை நடுத்துகிறோம். இது வெறும் நிலம் மட்டுமல்ல; எங்களது வாழ்வாதாரம். அடுத்த தலைமுறையினரின் சொத்து. வளமான விவசாய நிலங்களுக்கு பதிலாக வறண்ட நிலங்களை கையகப்படுத்தி கொள்ளுங்கள். ஏற்கனவே, நிலம் கையகப்படுத்தப்பட போது குடும்பத்துக்கு ஒருவருக்கு நிரந்தரமாக வேலை தருவதாக கூறப்பட்டது. இந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சிலருக்கு மட்டுமே ஒப்பந்த ஊழியர் பணி வழங்கப்பட்டு உள்ளது. உயிரே போனாலும் விவசாய நிலத்தை வழங்க மாட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !