நெற்றியில் குங்குமத்துடன் வந்த முதல்வர் சிந்துார் ராமையா என பா.ஜ., மாஜி கிண்டல்
பெங்களூரு:மூட நம்பிக்கையை வெறுக்கும் முதல்வர் சித்தராமையா, நேற்று நெற்றில் குங்குமம் வைத்தபடி, நம் ராணுவத்தின், 'ஆப்பரேஷன் சிந்துாரை பாராட்டி பேசினார்.ஹிந்து மதத்தின் மூட நம்பிக்கைகளை அடியோடு வெறுப்பவர் முதல்வர் சித்தராமையா. கோவிலுக்கு சென்றாலும் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வருவார். அவரின் நெற்றில் விபூதியோ, குங்குமமோ இருக்காது.ஆனால், நேற்று ராய்ச்சூரில் மத்திய அரசை கண்டித்து நடக்கவிருந்த போராட்டத்தை ரத்து செய்துவிட்டு, பெங்களூரில் நிருபர்களை சந்தித்தார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது நம் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதை அவர் பாராட்டினார்.அப்போது அவர், தன் நெற்றில் குங்குமம் வைத்தபடி வந்தது தான், அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர், ''இங்கு வருவதற்கு முன்பு, ஜெயநகரில் உள்ள பாட்டாலம்மா கோவில் மஹோத்சவத்தில் பங்கேற்றேன். அதனால் நெற்றில் குங்குமம் வைத்துள்ளேன்,'' என்றார்.இது குறித்து, மைசூரில் நேற்று பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா அளித்த பேட்டி:பாகிஸ்தானுடன் போர் வேண்டாம் என்று கூறி, அந்நாட்டின் ஹீரோவாக முதல்வர் சித்தராமையா அறியப்பட்டார். இவரின் பேச்சால் மக்கள் கோபமடைந்தனர். தற்போது நெற்றியில் சிந்துாரம் வைத்து, 'சிந்துர் ராமையா'வாக மாறி விட்டார்.ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். நெற்றியில் குங்குமம் வைத்து, அரசியல்வாதிகள் எவ்வாறு மாறுவர் என்பதற்கு முதல்வர் சித்தராமையா உதாரணமாவார்.ஜம்மு - காஷ்மீரை தாய்நாட்டின் சிந்துாரம் என்று அனைத்து பா.ஜ.,வினரும் ஜெபித்து வருகின்றனர்.பாகிஸ்தான் மீது 'ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதல் நடத்தி, பிரதமர் நரேந்திர மோடி, அதை நிரூபித்துள்ளார்.அணுகுண்டு சோதனை நடத்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயும்; பாகிஸ்தான் மீது குண்டுகளை வீசிய பிரதமர் மோடியும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.பாகிஸ்தானின் தந்தை காங்கிரஸ். அதனால் தான் அந்நாட்டு மீது குண்டுகள் வீசியது, காங்கிரசுக்கு வன்முறை போன்று தெரிகிறது. அக்கட்சியின் மனநிலையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறினார்.
சித்தராமையா பாராட்டு
பெங்களூரில் நேற்று முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:தேசிய பாதுகாப்பில் ஒருபோதும் சமரசம் செய்வதில் அர்த்தமில்லை. இது பாகிஸ்தானுக்கான எச்சரிக்கை மணி. ராணுவத்தினரின் நடவடிக்கைக்கு, எங்கள் அரசு முழு ஆதரவு அளிக்கிறது.'ஆப்பரேஷன் சிந்துார்' பெயரில், ஒன்பது பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. அப்பாவி பொது மக்கள் பலியாவதை தடுக்க, பயங்கரவாதிகள் முகாம் மட்டுமே தாக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி பொது மக்களை கொன்றவர்களுக்கு ஆதரவாக இருப்போருக்கும், சரியான பாடம்.இந்தியா மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, பாகிஸ்தான் கண்டனம் தெரிவிக்கவில்லை. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம்.அதுபோன்று மாநிலத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பெங்களூரு, ராய்ச்சூர், குடகு உட்பட பல பகுதிகளில் போர் ஒத்திகை நடத்தப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.