காங்., முன்னாள் எம்.எல்.ஏ., காகா சாகேப் பாட்டீல் மரணம்
பெலகாவி: உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, நிப்பானி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., காகா சாகேப் பாட்டீல் மரணம் அடைந்தார்.பெலகாவி நிப்பானி தொகுதியில் இருந்து 1999, 2004, 2008 ஆகிய சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனவர் காகா சாகேப் பாட்டீல், 70. கடந்த 2013, 2018, 2023 தேர்தல்களில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்தார்.சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். பெலகாவியில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரண்டு நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது.காகா சாகேப் பாட்டீல் மரணத்திற்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 2023 சட்டசபை தேர்தலுக்கு முன், நிப்பானியில் சித்தராமையா பிரசாரம் செய்தபோது, 'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஐந்து வாக்குறுதித் திட்டங்கள் நிறைவேற்றப்படும். அனைவருக்கும் எல்லாம் இலவசம். காகா சாகேப் பாட்டீல் உங்களுக்கும் இலவசம்' என கூறினார்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், வாக்குறுதி திட்டங்கள் சரியாக செயல்படுத்தாததை, பா.ஜ., தலைவர்கள் விமர்சித்தபோது, 'காகா சாகேப் பாட்டீல் உங்களுக்கும் அனைத்தும் இலவசம்' என சித்தராமையா கூறியதை வைத்து, கிண்டல் அடித்து வந்தனர். வாக்குறுதி திட்டங்கள் மூலம் அவர் பிரபலம் அடைந்திருந்தார்.