உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஓம்பிரகாஷ் கொலையில் பி.எப்.ஐ.,க்கு தொடர்பு; மாஜி டி.எஸ்.பி., அனுபமா செனாய் பகீர் தகவல்

ஓம்பிரகாஷ் கொலையில் பி.எப்.ஐ.,க்கு தொடர்பு; மாஜி டி.எஸ்.பி., அனுபமா செனாய் பகீர் தகவல்

மங்களூரு : ''ஓய்வு டி.ஜி.பி., ஓம்பிரகாஷ் கொலையில், பி.எப்.ஐ., அமைப்புக்கு தொடர்பு உள்ளது,'' என, 'மாஜி' டி.எஸ்.பி., அனுபமா செனாய் பகீர் தகவல் கூறி உள்ளார்.கர்நாடக முன்னாள் டி.ஜி.பி., ஓம்பிரகாஷ், 68. பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் குடும்பத்தினருடன் வசித்தார். கடந்த 20ம் தேதி ஓம்பிரகாஷ் வீட்டில் வைத்து, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி பல்லவி கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து சி.சி.பி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அப்பாவிகள்

இந்நிலையில் முன்னாள் டி.எஸ்.பி., அனுபமா செனாய், மங்களூரில் நேற்று அளித்த பேட்டி:ஓய்வு டி.ஜி.பி.,யை அவரது மனைவி பல்லவி, மகள் கிருதி கொலை செய்யவில்லை. அவர்கள் இருவரும் அப்பாவிகள். அவர்கள் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது. இந்த கொலையின் பின்னணியில் பி.எப்.ஐ., அமைப்புக்கு தொடர்பு உள்ளது.முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உள்ளிட்டோர் தங்கள் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள பார்க்கின்றனர்.

என்.ஐ.ஏ., விசாரணை

ஆளுங்கட்சியினர் கொடுக்கும் அழுத்தத்தால், இந்த வழக்கின் விசாரணை, பல்லவி கொலை செய்தார் என்ற கோணத்தில் மட்டுமே நடக்கிறது. ஓம்பிரகாஷ் உயிருடன் இருந்தால், சில அமைச்சர்களுக்கு தொந்தரவு ஏற்படும் என்று கொலை நடந்துள்ளது. இதுதொடர்பாக என்னிடம் சில ஆவணங்கள் உள்ளன. இந்த வழக்கை சி.சி.பி., விசாரித்தால் உண்மை வெளிவராது. என்.ஐ.ஏ., விசாரணைக்கு கொடுக்க வேண்டும். 2016ல் பல்லாரி கூட்லகியில் நான் டி.எஸ்.பி.,யாக பணியாற்றியபோது, மணல் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தேன்.இதனால் கோபம் அடைந்த சிலர், என் பணிக்கு இடையூறு செய்தனர். என் பதவியை ராஜினாமா செய்தேன். மீண்டும் பணிக்கு சேர்த்துக் கொள்ள, நான் கொடுத்த கடிதத்தை அரசு பரிசீலிக்கவே இல்லை. என் பிரச்னையின் பின்னணியிலும், பி.எப்.ஐ.,க்கு தொடர்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ