கணவரை விட்டு பிரிந்த பெண் கொலை கள்ளக்காதலர் உட்பட நான்கு பேர் கைது
கதக்: கணவரை விட்டு பிரிந்த மூன்று குழந்தைகளின் தாய் கொலையில் துப்பு துலங்கியது. கள்ளக்காதலர் உட்பட நான்கு பேர் சிக்கினர்.கதக் மாவட்டம், லட்சுமேஸ்வர் தாலுகாவின் சூரனகி கிராமத்தின் தொட்டூரா சாலை அருகில், ஏப்ரல் 23ம் தேதி அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதை பார்த்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த லட்சுமேஸ்வர் போலீசார், பெண்ணின் உடலை மீட்டனர். அவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.விசாரணையில் அப்பெண், லட்சுமேஸ்வர் தாலுகாவின், நேலோகல் கிராமத்தை சேர்ந்த லட்சுமி இங்களகி, 35, என்பது தெரிந்தது. உடலை, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, சகோதரி சந்தேகம் தெரிவித்தார். அவரது புகாரின்படி போலீசார் விசாரணையில் ஈடுபட்டபோது, பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.கொலையாளி சுனில், 30, உட்பட, நால்வர் போலீசாரிடம் சிக்கினர். இவர்களிடம் விசாரித்தபோது கொலைக்கான காரணம் தெரிந்தது.லட்சுமி இங்களகிக்கு திருமணமாகி, மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஆனால், கணவரை விட்டு பிரிந்து, தனியாக வசித்தார். மங்களூரில் கூலி வேலை செய்து வந்தார். இங்கு இவருக்கு சுனில் அறிமுகமானார்.நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதற்கிடையில் சுனிலின் குடும்பத்தினர், மகனுக்கு திருமண செய்ய பெண் பார்த்தனர்.சுனிலுக்கு திருமண ஏற்பாடு செய்வதை தெரிந்து கொண்ட லட்சுமி, தனக்கு ஐந்து லட்சம் ரூபாய் வேண்டும் என, பிடிவாதம் பிடித்தார். பணம் கொடுக்காவிட்டால் கள்ளத்தொடர்பை பகிரங்கப்படுத்துவதாக மிரட்டினார்.அதிர்ச்சி அடைந்த சுனில், இவ்விஷயத்தை தன் நண்பர்கள் சித்தப்பா, நடராஜ், ரமேஷிடம் கூறினார். அனைவரும் சேர்ந்து லட்சுமியை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினர்.அதன்படி பணம் கொடுப்பதாக நம்ப வைத்து, லட்சுமியை வரவழைத்தனர். காரில் அழைத்துச் சென்றனர். காரில் சென்றபோது, கேபிள் ஒயரால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.உடலை, சூரனகி அருகில் வீசிவிட்டு தப்பியது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.