எரிபொருள் சிக்கன நடவடிக்கை வாகனங்களை குறைத்தார் கவர்னர்
பெங்களூரு: நாட்டில் அனைவரும் குறைந்த அளவில் டீசல், பெட்ரோல் பயன்படுத்த வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி, வேண்டுகோள் விடுத்ததால், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், தான் வெளியிடம் செல்லும் போது பயன்படுத்தும் காவல் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளார். மேற்காசிய பிராந்தியத்தில் போர் நடந்ததன் விளைவாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில், பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்தும்படி, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன் பயனாக, பா.ஜ., ஆட்சியில் உள்ள மாநிலங்களின் கவர்னர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, பலரும், தங்களின் பாதுகாப்பு வாகனங்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளனர். பிரதமர் மோடியே, தன் காவல் படை வாகனங்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளார். இது, மற்றவர்களுக்கும் ஊக்கமளித்துள்ளது. இந்நிலையில், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டும், எரிபொருள் சிக்கன நடவடிக்கையில். பிரதமர் நரேந்திர மோடியுடன் கைகோர்த்துள்ளார். கவர்னருக்கு இதற்கு முன் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருந்ததால், மத்திய அரசு சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்புடன், மாநில அரசின் பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது. வெளியிடங்களில் அவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், அதிகபட்ச பாதுகாப்பு அளிப்பது வழக்கம். கவர்னரின் பாதுகாப்புக்காக, ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் ஏழு கார்கள் என, எட்டு வாகனங்கள் இருந்தன. அவர் எங்கு சென்றாலும், அந்த வாகனங்கள் அணிவகுத்தன. இவற்றின் எண்ணிக்கையை கவர்னர் பாதியாக குறைத்துள்ளார். ஒரு ஆம்புலன்ஸ், மூன்று கார்கள் என குறைக்கப்பட்டன. நேற்றில் இருந்தே வாகனங்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதை, கவர்னர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.