கிரேட்டர் பெங்களூரு ஆணையம் இந்த ஆண்டு அமலுக்கு வராது
பெங்களூரு : 'கிரேட்டர் பெங்களூரு ஆணையம், இந்த ஆண்டு அமலுக்கு வராது' என, உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. பெங்களூரில் அரசின் திட்டங்கள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கிடைக்கும் வகையில், மாநகராட்சிக்கு பதிலாக கிரேட்டர் பெங்களூரு ஆணையம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஆணையத்தின் கீழ் 5 மாநகராட்சிகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. கிரேட்டர் பெங்களூரு ஆணையம் உருவாக்கப்பட்டதாலும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில், மாநகராட்சியின் கட்டட விதிமீறல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடக்கிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. விசாரணையின்போது, 'கிரேட்டர் பெங்களூரு ஆணையம் எப்போது செயல்பாட்டுக்கு வரும்?' என, நீதிபதி நாகபிரசன்னா கேள்வி எழுப்பினார். இதற்கு அரசு தரப்பின் அட்வகேட் ஜெனரல் பதில் அளிக்கையில், 'பெங்களூரு மாநகராட்சியை, கிரேட்டர் பெங்களூராக மாற்ற அரசு திட்டமிட்டு இருந்தது. பல காரணங்களால் இந்த ஆண்டு கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தை அமலுக்கு கொண்டு வர முடியவில்லை. அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும். அதுவரை மாநகராட்சி தொடரும். ஜனவரியில் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது' என்றார்.