நடத்தையில் சந்தேகத்தால் பயங்கரம் மனைவியை கொன்ற கணவர் கைது
எலக்ட்ரானிக் சிட்டி: நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், நடுரோட்டில் மனைவி கழுத்தை அறுத்துக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டி பிரகதி நகரில் வசித்தவர் கிருஷ்ணா, 40. இவரது மனைவி சாரதா, 35. தம்பதிக்கு குழந்தை இல்லை. இவர்களின் சொந்த ஊர் சிக்கபல்லாபூர் பாகேபள்ளி. கடந்த சில தினங்களாக சாரதா மொபைல் போனில் யாரிடமோ அடிக்கடி பேசி உள்ளார்.இதுபற்றி கணவர் கேட்டபோது சரியாக பதில் சொல்லவில்லை. இதனால் மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம், கணவருக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவர் இடையிலும் அடிக்கடி தகராறு உண்டானது.நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், கிருஷ்ணா வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன், மனைவி இடையில் திடீரென தகராறு ஏற்பட்டது. சாரதா வீட்டில் இருந்து வெளியே வந்தார். கோபம் அடைந்த கிருஷ்ணா சமையல் அறைக்கு சென்று கத்தியை எடுத்து வந்து, சாரதாவின் கழுத்தை அறுத்தார்.ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த கொலையை பார்த்து அதிர்ச்சி அடைந்த, அப்பகுதி மக்கள் தப்பி ஓட முயன்ற கிருஷ்ணாவை பிடித்து எலக்ட்ரானிக் சிட்டி போலீசில் ஒப்படைத்தனர்.நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கொன்றதாக, போலீசாரிடம் கிருஷ்ணா வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணை நடக்கிறது.