மனைவி, 2 குழந்தைகளை கொன்று கணவர் தற்கொலை
மைசூரு: முகம், வாயில் பிளாஸ்டிக் கவர்களை சுற்றி மனைவி, இரு மகள்களை கொன்ற கணவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மைசூரு மாவட்டம் ஹூன்சூர் நகரில் உள்ள நியூ மாருதி லே - அவுட்டில் வசித்து வந்தவர்கள் ஹரிஷ், 42, இவரது மனைவி நிஷ்தா, 40, மகள்கள் நெக்சா, 13, ரக் ஷா, 6. நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதை கவனித்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாக பார்த்த போது, அறையில் ஹரிஷ் துாக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக, ஹூன்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். ஒரு அறையில் முகம், வாயில் பிளாஸ்டிக் கவர்கள் சுற்றப்பட்ட நிலையில், மனைவி, இரு மகள்கள் இறந்து கிடந்தனர். மற்றொரு அறையில் ஹரிஷ் துாக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். நான்கு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ஹரிஷ் மூன்று நாட்களுக்கு முன் தன் தாயை, பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான சரியான காரணம் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். ஹரிசின் நண்பர் சையது கூறுகையில், ''நேற்று காலை கூட அவரிடம் அரை மணி நேரம் பேசினேன். ஹரிஷ் பொருளாதார ரீதியாக நன்றாக உள்ளார்; எந்த பிரச்னையும் இல்லை. எதற்காக இத்தகைய முடிவு எடுத்தார் என்று தெரியவில்லை,'' என்றார்.