என் தந்தை மனதை மாற்ற மாட்டேன்: யதீந்திரா
மைசூரு: ''என் தந்தையின் மனதை மாற்ற முயற்சிக்க மாட்டேன்,'' என சித்தராமையாவின் மகன் யதீந்திரா கூறினார். மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: என் தந்தை சித்தராமையா, தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒரு மகனாக என் தந்தையின் மனதை மாற்ற முடியாது. அதற்காக நான் முயற்சிக்க மாட்டேன். அது மட்டுமின்றி, என் தந்தைக்கு தற்போது 80 வயதாகிறது. அவர் ஓய்வில் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தை காப்பாற்றி கொள்ள வேண்டும். இந்த வயதில் மீண்டும் தேர்தலில் போட்டியிடும்படி கூற, நான் விரும்பவில்லை. என் தந்தை ஒரு முறை கூறிவிட்டால், அத்துடன் முடிந்தது. அவர் தன் முடிவை மாற்ற மாட்டார். அடுத்த தேர்தலில் போட்டியிடுவது இல்லை என, ஏற்கனவே கூறியிருந்தார். மைசூரு தசராவில், கம்பாலா போட்டி நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த வாரம் அமைச்சரவை விரிவாக்ககம் செய்யப்படவில்லை. மைசூரு மாவட்டத்திலும், அமைச்சர் பதவி எதிர்பார்ப்போர் உள்ளனர். மூத்த எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். மைசூருக்கு மற்றொரு அமைச்சர் பதவி கிடைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.