துவரம் பருப்பு ஊக்கத்தொகை குவின்டாலுக்கு ரூ.450 உயர்வு
பெங்களூரு: துவரம் பருப்புக்கான ஊக்கத்தொகை, குவின்டாலுக்கு 450 ரூபாய் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கர்நாடகாவின் வட மாவட்டங்களில் துவரம் பருப்பு அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. மத்திய அரசின் 2024 - 2025 ஆண்டுக்கான ஆதரவு விலை திட்டத்தில், துவரம் பருப்பு விலை குவின்டாலுக்கு 7,550 ரூபாயாக இருந்தது.இந்நிலையில் துவரம் பருப்புக்கு குவின்டாலுக்கு 450 ரூபாய் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதாக அரசு நேற்று அறிவித்தது. இதற்கு தேவையான நிதியை சுழல் நிதியில் உள்ள தொகையில் இருந்து வழங்கவும், நிதித்துறை ஒப்புக்கொண்டுள்ளது. ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டு இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.வேளாண் விளை பொருள் சந்தைத் துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் கூறியதாவது:விவசாயிகள் நலனில் அக்கறை உள்ள காங்கிரஸ் அரசு, துவரம் பருப்புக்கான ஊக்கத்தொகையை குவின்டாலுக்கு 450 ரூபாய் உயர்த்தியுள்ளது.துவரம் பருப்புகளை கொள்முதல் செய்ய மாநிலம் முழுவதும் 400 மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் விவசாயிகள் கவலைப்பட தேவை இல்லை. இந்த ஆண்டு விஜயபுரா மாவட்டத்தில் 10.25 லட்சம் ஏக்கரில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.