ஐ.டி., பெண் ஊழியர் தற்கொலை கணவரிடம் விசாரணை
சுத்தகுன்டேபாளையா: கருவுற்று இருந்த ஐ.டி., நிறுவன பெண் ஊழியர் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கணவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். பெங்களூரு, சுத்தகுன்டேபாளையாவை சேர்ந்தவர் பிரவீன், 30. இவருக்கும், ஹூப்பள்ளியை சேர்ந்த ஷில்பா, 27 என்பவருக்கும், மூன்று ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. ஐ.டி., நிறுவனத்தில் ஷில்பா ஊழியராக வேலை செய்தார். தற்போது ஷில்பா, இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு தன் அறையில், துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பெற்றோர் ஹூப்பள்ளியில் இருந்து பெங்களூரு வந்தனர். மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். குடும்ப தகராறில் ஷில்பா தற்கொலை செய்தததாக, பிரவீன் போலீசில் புகார் செய்தார். ஆனால் தங்கள் மகள் தற்கொலை செய்யவில்லை; பிரவீன், அவரது தாய் சாந்தா, மைத்துனி பிரியா ஆகியோர் கொலை செய்ததாக, ஷில்பாவின் பெற்றோர் புகார் செய்தனர். இந்த புகாரின்படி பிரவீனிடம், சுத்தகுன்டேபாளையா போலீசார் விசாரிக்கின்றனர்.