சுயேச்சை எம்.எல்.ஏ., என்பதால் கவுரிபிதனுார் புறக்கணிப்பு?
சிக்கபல்லாபூர்: கவுரிபிதனுார் எம்.எல்.ஏ., புட்டசாமி கவுடா சுயேச்சை என்பதால், அவரது தொகுதியை அரசு புறக்கணிக்கிறாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.சிக்கபல்லாபூர் நந்தி மலையில் கடந்த 2ம் தேதி நடந்த சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில், பெங்களூரு வருவாய் மண்டலத்திற்கு உட்பட்ட பெங்களூரு, பெங்களூரு ரூரல், கோலார், சிக்கபல்லாபூர், துமகூரு ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.மொத்தம் 3,400 கோடி ரூபாய் செலவிலான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.சிக்கபல்லாபூரில் உள்ள பாகேபள்ளி தாலுகா பெயரை பாக்யநகர் என்று மாற்றவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.சிக்கபல்லாபூர் மாவட்டத்திற்கு மட்டும் 900 கோடி ரூபாய் திட்டங்களுக்கு, அமைச்சரவை அனுமதி அளித்தது.நிதி, திட்ட ஒப்புதல் அடிப்படையில் பார்த்தால் பாகேபள்ளி முதல் இடத்திலும், சிந்தாமணி இரண்டாவது இடத்திலும், சிக்கபல்லாபூர் மூன்றாவது இடம்; சித்தலகட்டா நான்காவது இடத்திலும் உள்ளது.ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கவுரிபிதனுார் தொகுதியின் மேம்பாட்டுப் பணிகளுக்கான திட்டங்களில் ஒன்றுக்குக் கூட ஒப்புதல் அளிக்கப்படவில்லை.அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பு 180 கோடி ரூபாய்க்கு திட்டங்களை தயாரித்து, கவுரிபிதனுார் எம்.எல்.ஏ., புட்டசாமி கவுடா அரசிடம் சமர்ப்பித்திருந்தார்.கவுரிபிதனுாரில் இருந்து ஆந்திராவின் ஹிந்துப்பூருக்கு செல்லும் சாலையை அகலப்படுத்த வேண்டும்; அலிபூரை நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்பது அவரின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.ஆனால் எந்த கோரிக்கையும் அமைச்சரவை கூட்டத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனால் அரசு மீது கவுரிபிதனுார் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். புட்டசாமி கவுடா சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவரது ஆதரவு அரசுக்கு உள்ளது. ஆனாலும் சுயேச்சை எம்.எல்.ஏ., என்பதால், கவுரிபிதனுாரை அரசு புறக்கணிக்கிறாதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.