விவசாயிகளை மோசடி செய்தவர்களுக்கு ஜமீர் ஆதரவு
பெங்களூரு: கர்நாடக விவசாயிகளை மோசடி செய்த வியாபாரிகளுக்கு ஆதரவாக, மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், போலீசாருடன் பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. சிக்கபல்லாபூரின் பரேசந்திரா கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் சிலரிடம், தெலுங்கானாவை சேர்ந்த வியாபாரிகள் நாசிர், அப்துல் ரஜாக், அக்பர் பாஷா ஆகியோர் சோளம் வாங்கினர். 89 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் பணம் கொடுக்காமல், விவசாயிகளை ஏமாற்றினர். இதுகுறித்து பரேசந்திரா போலீஸ் நிலையத்தில் விவசாயிகள் புகார் செய்தனர். எஸ்.ஐ., ஜெகதீஷ் வழக்குப் பதிவு செய்ய தயாரானார். இந்த விவகாரத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் தலையிட்டு, எஸ்.ஐ.,க்கு போன் செய்துள்ளார். 'புகாரில் கூறப்பட்டவர்கள் எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள். எனவே அவர்களை விட்டு விடுங்கள். வழக்குப் பதிவு செய்ய வேண்டாம்' என, அமைச்சர் கூறியுள்ளார். இதன்படி எஸ்.ஐ., ஜெகதீஷும், இரண்டு தரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து பேசி, வழக்கை முடிப்பதாக கூறியுள்ளார். அமைச்சர் மற்றும் எஸ்.ஐ., இடையே நடந்த உரையாடல் கொண்ட ஆடியோ, நேற்று சமூக வலைதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.