பயணியை அலட்சியப்படுத்திய கே.எஸ்.ஆர்.டி.சி., டிரைவர்
துமகூரு: 'கன்னடம் தெரியாதா?' என்று அலட்சியத்துடன் கேட்டதால், ஆத்திரமடைந்த பயணி ஒருவர், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் ஓட்டுரை தாக்கி, பஸ் கதவை பிடுங்கி எறிந்தார். துமகூரு மாவட்டம், சிரா பஸ் நிலையத்துக்கு நேற்று காலை, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் வந்து நின்றது. அப்போது அங்கு வந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர், 'இந்த பஸ் எங்கு செல்கிறது?' என, கேட்டார். இதற்கு பதில் அளிக்காத ஓட்டுநர், 'கன்னடம் தெரியாதா? பஸ் எங்கு செல்கிறது என்பது, போர்டில் உள்ளது; பாருங்கள்' என்றார். இதனால் கோபம் அடைந்த இளைஞர், ஓட்டுநரை தாக்கினார். ஓட்டுநரையும், நடத்துநரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். அது மட்டுமின்றி பஸ்சின் கதவை பிடுங்கி வீசினார். இதை கவனித்த சக பயணியர், தங்களின் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்தனர். தன்னை தாக்கியதுடன், பஸ்சையும் சேதப்படுத்திய இளைஞர் மீது புகார் அளிக்க, ஓட்டுநர் அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்றார். ஆனால் அப்பகுதியின் காங்கிரஸ் மூத்த அரசியல்வாதி ஒருவர், போலீஸ் நிலையத்துக்கு போன் செய்து, 'பஸ் ஓட்டுநரின் பெற வேண்டாம். அவரை தாக்கிய இளைஞர் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டாம்' என, கூறியுள்ளார். இதன்படி, பஸ் ஓட்டுநரின் புகாரை வாங்காத போலீசார், அவருக்கு புத்திமதி கூறி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைவரின் செயலுக்கு, போக்குவரத்துக்கழக ஊழியர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.