நிலம் கையகப்படுத்தும் பணி கைவிடப்பட்டது
தேவனஹள்ளி: விவசாயிகளின் எதிர்ப்பால், தேவனஹள்ளியில் நிலம் கையகப்படுத்தும் பணியை கர்நாடக வீட்டு வசதி வாரியம் கைவிட்டது. பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி தாலுகா விஸ்வநாதபுரா கிராமத்தில், கர்நாடக வீட்டு வசதி வாரியம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் கட்ட முடிவு செய்தது. இதற்காக, 164 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்தது. இது குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரியில் வெளியானது. இதற்கு, விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல போராட்டங்கள் நடந்து வந்தன. விவசாயிகள் பிடிவாதமாக இருந்தனர். இதற்கிடையே விவசாயிகளிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. இதனால், 164 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியை, கர்நாடக வீட்டு வசதி வாரியம் கைவிட்டதாக அறிவித்து உள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.