பெங்களூரு நகர பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
பனசங்கரி: பெங்களூரு நகரின், பனசங்கரியின் துரஹள்ளி வனப்பகுதியை ஒட்டி குடியிருப்பு பகுதி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன், இப்பகுதியில் சிறுத்தை நடமாடியது. இதை பிடிக்கும்படி மக்கள் வேண்டுகோள் விடுத்ததால், வனத்துறையினர் சிறுத்தையை தேட துவங்கினர். கூண்டும் வைத்தனர்; ஆனால் சிக்கவில்லை. வனத்துக்குள் ஓடியிருக்கலாம் என நினைத்தனர். இந்நிலையில், பனசங்கரியின் ஆறாவது ஸ்டேஜ், இரண் டாவது பிளாக் அருகில் உள்ள துரஹள்ளி வனப்பகுதியை ஒட்டியுள் ள குடியிருப்பில், நேற்று முன் தினம் மாலையில், சிறுத்தை சாலையில் நடந்து சென்றது. இதை பார்த்து பீதியடைந்த அப்பகுதியினர், பட்டாசு வெடித்து சிறுத்தையை விரட்டினர். வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர். சிறுத்தை நடமாடிய இடத்தின் சுற்றுப்பகுதியில், மக்கள் போக்குவரத்துக்கு தடை விதித்தனர்; கூண்டு வைத்தனர். 'சிறுத்தை நடமாடுவதால், யாரும் வெளியே நடமாட வேண்டாம். சிறு குழந்தைகளை வெளியே விளையாட விட கூடாது. வளர்ப்பு பிராணிகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக இரவு, அதிகாலை நேரத்தில் தனியாக நடமாட வேண்டாம்' என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். சிறுத்தை துரஹள்ளி வனத்தில் இருந்து, குடியிருப்புக்கு வந்திருக்கலாம் என, அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது, வனத்துக்குள் ஓடியதா அல்லது குடியிருப்புகளில் எங்காவது பதுங்கியுள்ளதா என்பது தெரியவில்லை.