ஹம்பி விருபாக்ஷா கோவில் வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்
விஜயநகரா: பக்தர்கள், சுற்றுலா பயணியர் அதிகமாக வரும் ஹம்பியின் விருபாக்ஷா கோவில் வளாகத்தில், சிறுத்தை நடமாடுவதால் பதற்றமான சூழ்ிலை ஏற்பட்டுள்ளது. விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் தாலுகாவில் உள்ளது ஹம்பி. உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர். இங்குள்ள விருபாக்ஷா கோவில் புராதனமானது. கோவிலின் ரத வீதி மற்றும் சாலு மண்டபங்கள் அருகே குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்பு வளாகத்தில், நேற்று முன்தினம் இரவு சிறுத்தை நடமாடியது. இந்த காட்சி கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. சிறுத்தை நடமாடினாலும், மக்களுக்கோ, கால்நடைகளுக்கோ எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. ஆனால், எந்த நேரத்திலும், தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது. இதுகுறித்து. தகவல் அறிந்த வனத்துறை ஊழியர்கள், சிறுத்தை நடமாட்டம் உள்ள இடங்களில் கண்காணிக்கின்றனர். ஹம்பியில் கற்குகைகள், மலைப்பகுதிகள் அதிகம் உள்ளதால், சிறுத்தைகள் வசிக்கும். எனவே, பொது மக்கள், சுற்றுலா பயணியர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாய்கள் சிறுத்தைகளுக்கு எளிதில் கிடைக்கும் உணவு என்பதால், அவ்வப்போது குடியிருப்புகளுக்கு வருகின்றன. அதன்பின் தன் இருப்பிடத்துக்கு திரும்பும். சிறுத்தையை கண்டால், அதை பிடிக்கவோ, தாக்கவோ முயற்சிக்க கூடாது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.