பேடரஹள்ளி அருகில் சிறுத்தை நடமாட்டம் நடை பயிற்சியாளர்கள் அலறியடித்து ஓட்டம்
பெங்களூரு: இதுவரை கிராமங்களில் மட்டுமே, மக்களை அச்சுறுத்திய சிறுத்தைகள், தற்போது பெங்களூரிலும் தென்படுகின்றன. நேற்று அதிகாலை பேடரஹள்ளியில், சிறுத்தை நடமாட்டத்தால், நடைபயிற்சிக்கு வந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். பெங்களூரின், பி.இ.எல்., லே - அவுட்டில், பேடரஹள்ளி அருகில் உள்ள பாரத் நகரில் உள்ள பூங்காவில், நேற்று அதிகாலை 4:30 மணிக்கு சிலர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுத்தை தென்பட்டதால், பீதியடைந்த நடைபயிற்சியாளர்கள், தப்பித்தோம், பிழைத்தோம் என, அலறியடித்து பூங்காவில் இருந்து வெளியே ஓடினர். பூங்காவில் சிறுத்தை நடமாடுவது குறித்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள், அங்கு வந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை, ஆய்வு செய்தனர். அப்போது சிறுத்தை பூங்காவுக்குள் செல்வது, நடமாடுவது, சாலையை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதிகாரிகள் அங்கேயே முகாமிட்டு, சிறுத்தையை தேடுகின்றனர். சுற்றுப்பகுதி மக்களை தனியாக நடமாட வேண்டாம். நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில், வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதற்கு முன் எலக்ட்ரானிக் சிட்டி, எலஹங்கா, பொம்மனஹள்ளி பகுதிகளில், சிறுத்தை தென்பட்டது. இப்போது பூங்காவில் நுழைந்திருப்பதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனப்பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களின் பெயரில், மரங்களை வெட்டி கட்டடங்கள் கட்டுவதால், வன விலங்குகள் வனத்தில் இருந்து, நகருக்குள் வருகின்றன.