கலெக்டர் உத்தரவுக்கு தடை மீண்டும் மது கடைகள் திறப்பு
தங்கவயல்: ராபர்ட் சன் பேட்டை பஸ் நிலையத்தில் 'சீல்' வைக்கப்பட்டிருந்த 4 மதுக்கடைகள் உட்பட 5 மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. கர்நாடக மாநிலத்தில் உள்ள பஸ் நிலையங்களில் எங்குமே மதுக் கடைகளுக்கு அனுமதி இல்லை. ஆனால், ராபர்ட் சன் பேட்டை பஸ் நிலையத்தில் மட்டும் மதுக் கடைகள் நடத்திக்கொள்ள நகராட்சி நிர்வாகமும், கோலார் மாவட்ட கலால் துறையும் அனுமதி வழங்கின. தங்கவயல் நகராட்சி ஆணையர், தங்கவயல் தாலுகா நீதிமன்ற நீதிபதிகள், கோலார் மாவட்ட கலெக்டர் ஆகியோர் கடந்த செப்டம்பரில் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து, பஸ் நிலையத்தில் உள்ள 4 மதுக்கடைகளையும், ராபர்ட் சன் பேட்டை முதல் கிராஸ் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையையும் மூட செப்டம்பர் 29ம் தேதி கோலார் மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி உத்தரவு பிறப்பித்தார். இதனால் தங்கவயல் நகராட்சி நிர்வாகம் மதுக்கடைகளுக்கு 'சீல்' வைத்தது. இதை எதிர்த்து கர்நாடக மாநில கலால்துறை நீதிமன்றத்தில் மதுக்கடை உரிமையாளர் பிராங்க் என்பவர் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த கலால் துறை நீதிமன்ற ஆணையர் வெங்கடேஷ் குமார் ஐ.ஏ.எஸ்., ராபர்ட் சன் பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து வந்த மதுக்கடைகளை மூடுவதற்கு மாவட்ட கலெக்டர் எம்.ஆர். ரவி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். அடுத்த விசாரணையை இம்மாதம் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த உத்தரவை தொடர்ந்து, ராபர்ட் சன் பேட்டை பஸ் நிலையத்தில் உள்ள 4 மதுக்கடைகளும், 1வது கிராசில் உள்ள ஒரு மதுக்கடையையும் நேற்று திறக்கப்பட்டன.