உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  உள்ளாட்சிகளுக்கு விரைவில் தேர்தல்: தயாராகும் ஆணையம்

 உள்ளாட்சிகளுக்கு விரைவில் தேர்தல்: தயாராகும் ஆணையம்

பெங்களூரு: கடந்த ஆறு ஆண்டுகளாக, பல காரணங்களால் தள்ளி வைக்கப்பட்ட கர்நாடக உள்ளாட்சி தேர்தல், ஏப்ரல், மே மாதம் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தயாராகும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் உட்பட, கர்நாடகாவின் பல்வேறு உள்ளாட்சிகளுக்கு, 2020க்கு பிறகு தேர்தல் நடக்கவில்லை. அதிகாரிகளின் தர்பார் நடக்கிறது. உச்ச நீதிமன்றம் பெங்களூரு மாநகராட்சி, கிரேட்டர் பெங்களூரு ஆணையமாக மாறுவதற்கு முன், 2020 செப்டம்பர் 10ம் தேதி, மாநகராட்சியின் கவுன்சிலர்கள் பதவி காலம் முடிந்தது. இதுவரை தேர்தல் நடக்கவில்லை. நிர்வாக அதிகாரியே ஜி.பி.ஏ.,வை நிர்வகிக்கிறார். இது குறித்து, கேள்வி எழுப்பி முன்னாள் கவுன்சிலர்கள் சிலர், உச்ச நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றமும் நடப்பாண்டு ஜூன் 30க்குள், ஜி.பி.ஏ.,வுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என, மாநில அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டது. இதன்படி தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு என, அனைத்து தேர்வுகளும் மார்ச், ஏப்ரல் இறுதிக்குள் முடிவடைய உள்ளது. அதன்பின் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த, ஆணையம் தயாராகிறது. இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. ஜி.பி.ஏ.,வுக்கு தேர்தல் நடக்கவுள்ளதால், காங்கிரஸ், பா.ஜ., மற்றும் ம.ஜ.த., முன்னாள் கவுன்சிலர்கள் சுறுசுறுப்படைந்துள்ளனர். வெற்றி வாய்ப்புள்ள வார்டுகளை தேடுகின்றனர். வார்டுகளை முடிவு செய்தவர்கள், சீட் உறுதி செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய தலைவர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். 240 தாலுகாக்கள் ஜி.பி.ஏ., தேர்தல் ஆளுங்கட்சியான காங்கிரஸ், எதிர்க்கட்சியான பா.ஜ.,வுக்கு அக்னி பரீட்சையாக இருக்கும். பொதுவாக பெங்களூரின் பெரும்பாலான வார்டுகள், பா.ஜ.,வின் பாதுகாப்பு கோட்டையாகும். இந்த வார்டுகளை கைப்பற்றுவது, எளிதான விஷயம் அல்ல. ஜி.பி.ஏ. ஆட்சியை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில், காங்கிரஸ் உள்ளது. பட்ஜெட் தாக்கல் முடிந்த பின், உள்ளாட்சி தேர்தலுக்கு, அரசு தயாராகும். தேர்தல் குறித்து, உயர் அதிகாரிகள் கூறியதாவது: ஜி.பி.ஏ., தேர்தலுடன், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து, கிராம, பட்டண பஞ்சாயத்து, மாநகராட்சி, நகராட்சி என, மற்ற உள்ளாட்சிகளுக்கும், ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும். இதற்காக தேர்தல் ஆணையம் தயாராகிறது. வாக்காளர் பட்டியல் ஆய்வு, ஓட்டுச்சாவடி அமைப்பது என, அனைத்து முன்னேற்பாடுகளை துவக்கும்படி, மாவட்ட நிர்வாகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவின் பெரும்பாலான கிராம பஞ்சாயத்துகளின் தலைவர், துணைத் தலைவர்களின் பதவி காலம், 2026 பிப்ரவரி இரண்டாம் வாரம் முடிவடைகிறது. நடப்பாண்டு மார்ச்சில் 92 கிராம பஞ்சாயத்துகளின் பதவி காலம் முடிவடைகிறது. இந்த கிராம பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடத்த, ஆணையம் தயாராகிறது. பெரும்பாலான கிராம பஞ்சாயத்துகளை அதிகாரிகள் நிர்வகிக்கின்றனர். ஏற்கனவே கர்நாடகாவின், 187 நகராட்சிகளின் கவுன்சில் பதவி காலம் முடிவடைந்துள்ளன. 2021லிருந்தே 31 மாவட்ட பஞ்சாயத்துகள், 240 தாலுகா பஞ்சாயத்துகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லை. நிர்வாக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. இவைகளுக்கும் தேர்தல் நடக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை