ஆட்டுக்கு பணம் கேட்ட பெண்ணை கொன்றவர் கைது
தேவனஹள்ளி: ஆடு வாங்கியதற்கு பணம் கேட்டதால், ஏரியில் மூழ்கடித்து பெண்ணை கொலை செய்த, இறைச்சிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளி தாலுகா, விஜயபுரா டவுன் பரசுராமநகரில் வசித்தவர் வரலட்சுமி, 49. கடந்த மாதம் 27ம் தேதி விஜயபுரா அருகே சிக்கனஹள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் பிணமாக மிதந்தார். விஜயபுரா போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஏரியில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், 'ஏரியில் தவறி விழுந்து விஜயலட்சுமி இறக்கவில்லை, அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி உள்ளன' என, அவரது மகன் அருண், போலீசில் புகார் செய்தார். இந்த புகார் அடிப்படையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். கடந்த மாதம் 26ம் தேதி வரலட்சுமியை, பரசுராமநகரில் வசிக்கும் மது, 26, என்பவர், தன் காரில் அழைத்துச் சென்றது தெரிய வந்தது. நேற்று முன்தினம் மதுவை பிடித்து போலீசார் விசாரித்தனர். வரலட்சுமியை ஏரியில் மூழ்கடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார். இறைச்சிக் கடை நடத்தும் மது, கடந்த ஆண்டு வரலட்சுமியிடம் இருந்து செம்மறி ஆட்டை வாங்கி இருந்தார். ஆனால் ஆட்டிற்கு உரிய பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்தார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. மது பணம் கொடுக்காமல் இருப்பது பற்றி, அவரது உறவினர்கள் சிலரிடமும் வரலட்சுமி கூறியது, மதுவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பணம் தருவதாக கூறி அழைத்துச் சென்று, வரலட்சுமியை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.