காங்., பெண் எம்.எல்.ஏ.,வை ஆபாசமாக விமர்சித்தவர் கைது
சிக்கமகளூரு: காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ., நயனாவை, ஆபாசமாக விமர்சித்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார். சிக்கமகளூரின் மூடிகெரே தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நயனா. இவர் தனது, 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் பதிவிடும் தனிப்பட்ட புகைப்படங்களுக்கு, சிலர் ஆபாச கருத்து தெரிவித்தனர். நயனாவின் ஒரு புகைப்படத்திற்கு, விபச்சாரி என்று ஒருவர் கருத்து பதிவிட்டு இருந்தார். இது தொடர்பான, 'ஸ்கிரீன்ஷாட்'டுகளை, நயனா நேற்று முன்தினம் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் நயனாவை, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆபாசமாக விமர்சித்து வந்த, ராம்நகரின் யக் ஷித் ராஜ், 30, என்பவரை, மூடிகெரே போலீசார் நேற்று கைது செய்தனர். இவர், பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதுகுறித்து நயனா கூறுகையில், ''நான் இரண்டு இன்ஸ்டாகிராம், பேஸ்புக் கணக்கு வைத்து உள்ளேன். ஒன்று அரசியல் தொடர்பானது; இன்னொன்றில் என் தனிப்பட்ட புகைப்படங்களை பதிவிடுகிறேன். எனது தனிப்பட்ட புகைப்படங்களை பார்த்து, பலர் ஆபாசமாக கருத்து தெரிவித்து உள்ளனர். இப்போது ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். ''எனது புகைப்படங்களை பதிவிட கூட எனக்கு உரிமை இல்லையா. பெண்கள் அரசியலுக்கு வருவதே கஷ்டம். இப்படி கருத்து தெரிவித்தால் யார் வருவர். எம்.எல்.ஏ.,வாக இருக்கும் என்னையே துஷ்பிரயோகம் செய்வோர், சாதாரண பெண்களை எப்படி எல்லாம் பேசுவரோ என்று நினைத்தாலே பயமாக உள்ளது,'' என்றார்.