உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முதலாளியின் தாயை கத்தியால் குத்தி கொள்ளையடித்தவர் கைது

முதலாளியின் தாயை கத்தியால் குத்தி கொள்ளையடித்தவர் கைது

பனசங்கரி: வேலையில் இருந்து நீக்கியதால் முதலாளியின் தாயை கத்தியால் குத்தி, 8 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், டிரைவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு, பனசங்கரி சிண்டிகேட் காலனியில் வசிப்பவர் ராகுல். தனியார் நிறுவன அதிகாரி. இவரது தாய் கனகபுஷ்பம்மா, 70. நான்கு மாதங்களுக்கு முன்பு, பாகல்கோட்டின் மடிவாளா என்கிற மேடி, 26, என்பவரை, கார் டிரைவராக ராகுல் வேலைக்கு சேர்த்தார். மடிவாளாவுக்கு, ராகுல் வீட்டிலேயே தங்குவதற்கு அறை கொடுக்கப்பட்டது. கனகபுஷ்பம்மா தினமும் உணவு வழங்கினார். கடந்த செப்டம்பர் 14ம் தேதி காலை, சம்பள விஷயத்தில் ஏற்பட்ட பிரச்னையில், மடிவாளாவை வேலையில் இருந்து ராகுல் நிறுத்தினார். அன்றைய தினமும் இரவே மடிவாளா உட்பட 4 பேர், ராகுலின் வீட்டிற்கு வந்தனர். காலில் பெல்லை அழுத்தினார். வீட்டிற்குள் இருந்த கனகபுஷ்பம்மா யார் என்று கேட்டபோது, 'ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து உள்ளீர்கள்; உணவு கொடுக்க வந்துள்ளேன்' என்று ஒருவர் கூறினார். உண்மை என்று நம்பி கனகபுஷ்பம்மா கதவை திறந்தார். வீட்டிற்குள் புகுந்த மடிவாளா உட்பட 4 பேரும், கனகபுஷ்பம்மா வாயில் துணியை வைத்தனர். இரும்புக் கம்பியால் அடித்ததுடன், கத்தியால் கழுத்தில் குத்தினர். அவர் மயங்கி விழுந்தார். பீரோவில் இருந்த எட்டு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பினர். நான்கு பேரும் வெளியே சென்றபோது, மயக்கத்தில் இருந்து எழுந்த கனகபுஷ்பம்மா, வெளியே வந்து, 'திருடன்... திருடன்...' என்று கத்தினார். அங்கிருந்தவர்கள், கொள்ளையரில் ஒருவரை மடக்கிப் பிடித்தனர். மடிவாளா உட்பட 3 பேர் தப்பினர். ராகுல் அளித்த புகாரில், பனசங்கரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் பிடிபட்ட கொள்ளையன் ஒப்படைக்கப்பட்டான். விசாரணையில் அவர் பெயர், கணேஷ் என்பது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த மடிவாளா, அவரது தம்பி குரு உட்பட 3 பேர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் ஐந்து லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை