போதையில் தகராறு செய்தவர் பீர் பாட்டிலால் அடித்து கொலை
புட்டேனஹள்ளி: குடிபோதையில் பிறருடன் தகராறு செய்த வாலிபர், பீர்பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்டார். பெங்களூரு கனகபுரா ரோடு ஜரகனஹள்ளியில் வசித்தவர் உதய், 24. நேற்று முன்தினம் இரவு, மதுக்கடைக்கு சென்றார். அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். போதை தலைக்கு ஏறியதும், தன் அருகில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த இருவரை பார்த்து சத்தம் போட்டார். இதனால் உதய்க்கும், அந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பார் ஊழியர்கள் சமாதானம் செய்தனர். பின், இருவரிடமும் மன்னிப்பு கேட்டு, உதய் அங்கிருந்து கிளம்பினார். ஆனாலும், அவரை பின் தொடர்ந்து சென்ற இருவரும், மீண்டும் தகராறு செய்து தாக்கினர். பீர் பாட்டிலால் உதய் தலையில் அடித்தனர். உடைந்த பீர்பாட்டில் கண்ணாடி துண்டுகளால், உதய் வயிற்றில் சரமாரியாக குத்தி தப்பினர். ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியவரை, ரோந்து போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, உதயை கொலை செய்தது, ஜரகனஹள்ளியில் வசிக்கும் செலுவா, 25, தேஜா, 26 என்பது தெரிந்தது. தலைமறைவாக உள்ள இருவரையும், புட்டேனஹள்ளி போலீசார் தேடுகின்றனர்.