உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ராமேஸ்வரத்தில் காணாமல் போனவர் மங்களூரில் மீட்பு

ராமேஸ்வரத்தில் காணாமல் போனவர் மங்களூரில் மீட்பு

மங்களூரு: தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட நபர், மங்களூரில் கண்டுபிடிக்கப்பட்டு, குடும்பத்துடன் சேர்க்கப்பட்டார். தமிழகம், திருநெல்வேலியின் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில், 50; குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இவரது குடிப்பழக்கத்தால் வெறுப்படைந்து, இவரது முதல் மனைவி பிரிந்து சென்றார். அதன்பின் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அப்போதும் குடிப்பழக்கத்தை விடாததால், இரண்டாவது மனைவியும் விலகிச் சென்றுவிட்டார். முதல் மனைவிக்கு ஒரு மகனும், இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இரண்டு மனைவியரும் பிரிந்து சென்றதால், முகமது இஸ்மாயில் மன நோயாளியானார். இவரை பல டாக்டர்களிடம் குடும்பத்தினர் அழைத்துச் சென்றும் குணமடையவில்லை. எனவே தர்காக்களுக்கு அழைத்துச் சென்றனர். அதேபோன்று, கடந்தாண்டு ராமேஸ்வரத்தின், ஏர்வாடியில் உள்ள தர்காவுக்கு அழைத்துச் சென்று, பிரார்த்தனை செய்தனர். அங்கு இவர் காணாமல் போனார்; அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து, முகமது இஸ்மாயில் எப்படியோ மங்களூருக்கு வந்தார். அழுக்கான உடையுடன் நடமாடிய அவரை, மங்களூரை சேர்ந்த தொண்டு அமைப்பினர் மீட்டனர். அவரை அழைத்துச் சென்று, தங்களின் அமைப்பில் தங்க வைத்து, சிகிச்சை அளித்தனர். ஆரம்ப நாட்களில் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். நாளடைவில் படிப்படியாக முழுமையாக குணமடைந்தார். தன் பெயர், ஊர் குறித்து கூறினார். அமைப்பினர் முகமது இஸ்மாயில், ஊரின் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு, தகவல் கூறி அவரது குடும்பத்தினரை கண்டுபிடித்தனர். ஓராண்டாக தேடியும், இஸ்மாயில் கிடைக்காததால், இனி அவர் கிடைக்கமாட்டார் என, நம்பிக்கையில் இழந்த குடும்பத்தினர், அவர் மங்களூரில் இருக்கும் தகவல் கேட்டு மகிழ்ந்தனர். அவரது அக்காவும், மருமகனும் நேற்று மங்களூருக்கு வந்து, அவரை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். அமைப்பின் கோரின்ஹா ரஸ்கின் கூறியதாவது: முகமது இஸ்மாயில், மங்களூரில் கிடைத்தபோது, மிகவும் முரட்டுத்தனமாக இருந்தார். நாங்கள் அவருக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தினோம். அவர் தன் ஊரின் பெயரை கூறினார். அதன்பின், தமிழக போலீசார் உதவியுடன், அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டோம். அவர்கள் மங்களூரு வந்து, அவரை மகிழ்ச்சியோடு அழைத்துச் சென்றனர். இனி அவரை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வதாக கூறினர். எங்களால் குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டவர்களில், முகமது இஸ்மாயில், 460வது நபர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !