எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட்; கவர்னரிடம் பா.ஜ., புகார்
பெங்களூரு; எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக, கவர்னரிடம் பா.ஜ., சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.சபாநாயகர் பதவியை அவமதித்ததாக பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை 'சஸ்பெண்ட்' செய்து, சபாநாயகர் காதர் நேற்று உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவர்னர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தலைமையில் பா.ஜ., உறுப்பினர்கள் மனு அளித்தனர்.பின், விஜயேந்திரா அளித்த பேட்டி:ஆளுங்கட்சி அமைச்சர் ராஜண்ணா, தன்னை ஹனிடிராப்பில் சிக்க வைக்க முயற்சி நடந்தது.மாநில, தேசிய அரசியல் தலைவர்கள் 48 பேரின் 'பென்டிரைவ்' உள்ளது என, சட்டசபையில் கூறினார்.அமைச்சர் ஒருவர் வெளிப்படையாக கூறும்போது, அவரை பாதுகாக்கும் பொறுப்பு முதல்வர், சபாநாயகருக்கு உள்ளது.சட்டசபையின் 224 எம்.எல்.ஏ.,க்களையும் பாதுகாக்கும் பொறுப்பு சபாநாயகருக்கு உள்ளது. ஆனால் அமைச்சர் சார்பில் போராட்டம் நடத்திய எங்கள் எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டு உள்ளார். இது ஜனநாயக விரோத நடவடிக்கை.முதல்வர் பதவிக்கான போட்டியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மானங்களை தெருவில் கொண்டு வந்து ஏலம் விட்டுள்ளனர்.முன்னாள் எம்.எல்.ஏ., அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. இருப்பினும் அதை காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை.தலித்துகள் மீது அக்கறை இல்லை. முஸ்லிம்கள் மீது கவனம் செலுத்துகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.