உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இரண்டு குழந்தைளை கொன்று தாய் தற்கொலை

இரண்டு குழந்தைளை கொன்று தாய் தற்கொலை

பாகல்குன்டே: பெங்களூரு, புவனேஸ்வரி நகரின் எட்டாவது பிரதான சாலை, நான்காவது குறுக்கு சாலையில் வசிப்பவர் ரமேஷ், 30. இவர் மால் ஒன்றில், மேலாளராக பணியாற்றுகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி, 25. தம்பதிக்கு பிருந்தா, 4, என்ற மகளும், ஒன்றரை வயதில் புவன் என்ற மகனும் இருந்தனர். இதே வீட்டில் ரமேஷின் சித்தியும் வசிக்கிறார். இவரும் பணிக்கு செல்கிறார். ரமேஷ் பணி நிமித்தமாக ஊருக்கு சென்றுள்ளார். நேற்று முன் தினம் காலை, ரமேஷின் சித்தி வழக்கம் போன்று பணிக்கு சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில், விஜயலட்சுமி தன் மகளையும், மகனையும் துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தானும் மின் விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ரமேஷின் சித்தி, பணி முடிந்து இரவு வீடு திரும்பியபோது, மூவரும் இறந்து கிடப்பதை கண்டு அலறி கூச்சலிட்டார். அதை கேட்டு அக்கம், பக்கத்தினர் உதவிக்கு வந்தனர். போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த பாகல்குன்டே போலீசார், மூவரின் சடலங்களையும் மீட்டனர். மனைவியும், குழந்தைகளும் இறந்ததை அறிந்து, ரமேஷ் நேற்று காலை ஊரில் இருந்து திரும்பினார். குழந்தைகளை கொன்று விஜயலட்சுமி தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்பது தெளிவாகவில்லை. ரமேஷ், வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். இதனால் விவாகரத்து அளிக்கும்படி, விஜயலட்சுமிக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதே காரணத்தால், விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக, அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் விசாரணையை துவக்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ