முருகா சரணருவிடம் கோர்ட்டில் விசாரணை
சித்ரதுர்கா: பலாத்கார வழக்கு தொடர்பாக, சிவமூர்த்தி முருகா சரணரு, சித்ரதுர்கா நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.சித்ரதுர்காவில் முருகா மடம் உள்ளது. மடாதிபதியாக இருந்த சிவமூர்த்தி சரணரு, 64, மடத்தின் உயர்நிலைப் பள்ளியில் படித்த மாணவியரை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இரண்டு மாணவியர் புகார் அளித்தனர். இதுகுறித்து, சித்ரதுர்கா போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் தனித்தனியாக இரண்டு வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமின் கிடைத்தது. சித்ரதுர்காவில் நுழையக்கூடாது என, நீதிமன்றம் நிபந்தனை விதித்திருப்பதால், தாவணகெரேவின் விரக்த மடத்தில் தங்கியுள்ளார்.வழக்கு விசாரணையை முடித்த போலீசார், சித்ரதுர்கா நகரின் 2வது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் சிவில் நீதிமன்றத்தில் இரண்டு கட்டங்களாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 51 சாட்சிகள் விசாரணை நடத்தப்பட்டன.சித்ரதுர்காவுக்கு வர, சிவமூர்த்தி சரணருக்கு தடை இருந்ததால், அவரிடம் காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு காது கேளாமை பிரச்னை இருப்பதாலும், வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியதாலும், விசாரணைக்கு ஆஜராகும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதன்படி நேற்று விசாரணைக்கு நீதிமன்றத்தில் சிவமூர்த்தி முருகா சரணரு ஆஜரானார். பகல் 12:30 மணி முதல், மாலை 5:15 மணி வரை, அவரிடம் விசாரணை நடந்தது. மாணவியரின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார். விசாரணை 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.விசாரணை முடிந்த பின், தாவணகெரேவுக்கு திரும்பினார்.