உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பசுமைக்கு பெயர் பெற்ற நாகரா கிராமம்

 பசுமைக்கு பெயர் பெற்ற நாகரா கிராமம்

கர்நாடகாவின் மலைநாடு மாவட்டம் என்ற புனைப்பெயருடன் ஷிவமொக்கா அழைக்கப்படுகிறது. இதற்கு ஏற்றார்போல மாவட்டத்தின் பல இடங்களில் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளன. ஆன்மிகத்திற்கு சிக்கந்துார் சவுடேஸ்வரி கோவில், சுற்றுலாவுக்கு ஜோக் நீர்வீழ்ச்சி என ஷிவமொக்கா பெயர் எடுத்து உள்ளது. ஆன்மிகம், சுற்றுலா மட்டுமின்றி பசுமைக்கும் பெயர் போன கிராமமும் இங்குள்ளது. ஹொசநகர் அருகே உள்ளது நாகரா கிராமம். இக்கிராமம் முழுதும் பச்சை, பசேலென காட்சி அளிக்கிறது. இந்த கிராமத்தை வரலாற்று சிறப்புமிக்க இடம் என்றே, அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். கடந்த 1763ல் ஹைதர் அலி நாகரா கிராமத்தை கைப்பற்றி, பல கோட்டைகளை அமைத்தார். இதனால் கிராமத்திற்கு கோட்டைகளின் கிராமம் என்ற பெயரும் உண்டு. நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின், -ஸ்ரீபதி ராவ் என்பவர் கிராமத்தை பராமரித்தார். ஹைதர் அலி கட்டிய கோட்டைகள், சிவப்ப நாயக்கர் கோட்டை, நீலுகண்டேஸ்வரர், வெங்கடரமண சுவாமி கோவில்களை பராமரித்து வந்தார். தற்போதும் கிராமத்தில் உள்ள கோட்டைகளுக்குள், இரண்டு பழங்கால தொட்டிகள், பழங்கால பீரங்கிகள் உள்ளன. கிராமத்தில் உள்ள இயற்கை சூழலை அனுபவிக்கவும், பழங்கால கோட்டைகளை பார்க்கவும், இங்கு அதிக சுற்றுலா பயணியர் வருகின்றனர். பசுமை போர்வைக்குள் நின்று உற்சாகமாக, குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைகின்றனர். எப்படி செல்வது? பெங்களூரில் இருந்து 400 கி.மீ., துாரத்திலும், ஹொசநகரில் இருந்து 17 கி.மீ., துாரத்திலும் நாகரா கிராமம் உள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து ஹொசநகர், சாகருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் சேவை உள்ளது. ரயிலில் செல்வோர் ஷிவமொக்கா அல்லது சாகர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து, நாகரா கிராமத்திற்கு ஆட்டோ, வாடகை காரில் செல்லலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ