கர்நாடகாவில் நிலவும் வறட்சி ஆய்வு செய்ய நிகில் முடிவு
பெங்களூரு: கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில், மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விளைச்சல் சேதமடைந்ததால், விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். எனவே, வறட்சி பாதிப்பு பகுதிகளை, நேரில் பார்வையிட ம.ஜ.த., இளைஞர் தலைவர் நிகில் குமாரசாமி முடிவு செய்துள்ளார். இது குறித்து, நேற்று அவர் கூறியதாவது: கர்நாடகாவில் நடப்பாண்டு பருவமழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. சில மாவட்டங்களில், அதிகமான மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில மாவட்டங்களில், 40 - 43 சதவீதம் மழை பற்றாக்குறை ஏற்பட்டு, வறட்சி சூழ்ந்துள்ளது. பயிர்களை இழந்து விவசாயிகள், மன வருத்தத்தில் உள்ளனர். வறட்சி பாதிப்புகளை நேரில் சென்று, ஆய்வு செய்யும்படி மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். எனவே, விளைச்சல் சேதத்தை, ஆய்வு செய்ய ம.ஜ.த., குழுக்கள் அமைத்துள்ளன. நான் இன்று முதல், ஜூலை 15 வரை வறட்சி பாதிப்பு மாவட்டங்களில், சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். விஜயபுரா, பாகல்கோட் மாவட்டங்களுக்கு சென்று, வறட்சியை ஆய்வு செய்வேன். விவசாயிகளை சந்தித்து, பிரச்னைகளை கேட்டறிவேன். எங்கள் கட்சி குழுவினர், வறட்சி மற்றும் வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரை சந்திப்பர். அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வரை, நாங்கள் போராடுவோம். ஆய்வு குழுவில், பன்டேப்பா காஷம்பூர், வெங்கடராவ் நாடகவுடா, சரணகவுடா கந்தகூர், பீமன கவுடா உட்பட, 21 பேர் இருப்பர். இவ்வாறு அவர் கூறினார்.