இட்லி கடை வைப்பதில் தகராறு ஒருவர் கொலை; ஒருவர் கைது
ராய்ச்சூர் : ராய்ச்சூர் நகரின் சதார் பஜார் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் சாதிக், 27. நகரின் ஜாகிர் உசேன் சதுக்கத்தில் காலை நேர தள்ளுவண்டி இட்லி கடை வைத்துள்ளார். அதேபோன்று, கரீம் என்பவரும் இதே பகுதியில் இட்லி கடை வைத்து நடத்தி வந்தார்.இப்பகுதியில் இட்லி கடை வைப்பதில் ஆரம்பத்தில் இருந்தே சாதிக், கரீம் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை வழக்கம் போல் தள்ளுவண்டியுடன், ஜாகிர் உசேன் சதுக்கத்துக்கு சாதிக் சென்றார்.அப்போது அங்கு மற்றொருவருடன் வந்த கரீம், சாதிக்கிடம் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. கோபமடைந்த கரீம், அவருடன் வந்தவரும் சேர்ந்து, கத்தியால் சாதிக்கை குத்தி விட்டு தப்பியோடினர்.அங்கிருந்தவர்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். சாதிக்கை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்பியோடிய கரீமை கைது செய்தனர். அவருடன் இருந்த நபரை தேடி வருகின்றனர்.