குப்பை வாகன நேரம் மாற்றம் பெங்., மாநகராட்சி அறிவிப்பு
பெங்களூரு: பெங்களூரில் குப்பை சேகரிக்க, வீடு வீடாக வரும் வாகனங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து, பெங்களூரு மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: பெங்களூரில் துப்புரவு பணிகளின் தரம் உயர்த்தப்படுகிறது. இதற்காக வீடு வீடாக சென்று, குப்பை சேகரிக்கும் வாகனங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக தினமும் காலை 6;00 மணி முதல் 7:30 மணி வரை, குப்பை சேகரிக்கப்பட்டது. இன்று (நேற்று) முதல், ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே, குப்பை வாகனங்கள் வரும். அதிகாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை வீடுகளுக்கு குப்பை சேகரிக்க வாகனங்கள் வரும். நேரம் மாற்றத்தால் பணிக்கு செல்லும் மக்களுக்கு உதவியாக இருக்கும். பணிக்கு செல்லும் அவசரத்தில், குப்பை வாகனங்களுக்காக காத்திராமல், கண்ட இடங்களில் குப்பையை வீசுவதையும் தவிர்க்கலாம். பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீட்டு வாசலுக்கு வரும் வாகனங்களில், குப்பையை போட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.