கர்நாடகாவில் போக்சோ குற்றங்கள் அதிகரிப்பு!; இரண்டரை ஆண்டில் 10,510 வழக்குகள் பதிவு
பெ ங்களூரு உட்பட, கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் பெண்கள், சிறுமியர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் சம்பவங்கள் நடக்கின்றன. பலாத்காரங்களை கட்டுப்படுத்த, அரசும், போலீஸ் துறையும் எடுத்த நடவடிக்கை எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் வலுவான, 'போக்சோ' சட்டம் அமலில் இருந்தும் கூட, இத்தகைய குற்றங்களை தடுக்க முடியவில்லை. நீதிமன்றங்களும் போக்சோ வழக்குகளில் கைதானவர்களுக்கு, 20 முதல் 35 ஆண்டு வரையிலான சிறை தண்டனை விதிக்கின்றன. சில நாட்களுக்கு முன், சிறுமி பலாத்கார வழக்கில் ரகு, 26, என்பவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து, பெங்களூரு போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கிடையே, போலீஸ் துறை அதிர்ச்சி அளிக்கும் புள்ளி விபரங்களை தெரிவித்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டில் கர்நாடகாவில் 10,510 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி கூறியதாவது: பெண்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்புக்காக, கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனாலும், இவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன. 2023 முதல் 2025 ஜூலை வரையிலான இரண்டரை ஆண்டுகளில், பாலியல் பலாத்காரம், பாலியல் தொல்லை, வரதட்சணை மற்றும் இறப்புகள், கணவரால் தொல்லை, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள் பயன்படுத்தியது உட்பட, 43,053 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெண்கள் பாலியல் பலாத்காரம், வரதட்சணை கொடுமை, போக்சோ சட்டத்தின் சட்டத்தின் கீழ பதிவான வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகும். பணியிடம் உட்பட வெவ்வேறு இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, 16,273 வழக்குகள், வரதட்சணை கொடுமை பற்றி 5,456 வழக்குகள் பதிவாகியுள்ளன. வரதட்சணை கொடுமையால், 340 பெண்கள் இறந்துள்ளனர். கணவரின் சித்ரவதை தொடர்பாக 7,546 வழக்குகள் பதிவாகியதாக, போலீஸ் துறையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கின்றன. 2023ம் ஆண்டில் 3,902 வழக்குகள், 2024ல் 4,064 வழக்குகள், 2025 ஜூலை வரை 2,544 என மொத்தம் 10,510 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஏழ்மை, கல்வி அறிவின்மை, சட்டம் குறித்து விழிப்புணர்வு இல்லாதது போன்ற காரணங்களால், பெண்கள், சிறார்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, மகளிர் ஆணையம், போலீஸ் துறையின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு அளிக்கிறது. அவர்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு காண்கிறது. விரைவு நீதிமன்றங்கள் அமைத்து, பாலியல் பலாத்காரம், போக்சோ வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். குற்றவாளிகளை தண்டித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.